தனது அடுத்தப் படத்துக்காக பா.ரஞ்சித், இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'சார்பட்டா பரம்பரை' திரைப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது. 70களின் இறுதியில் வட சென்னையில் நடைபெற்ற குத்துச்சண்டை விளையாட்டை அடிப்படையாகக்கொண்டு இந்தப் படம் உருவாகியிருந்தது.
இதனையடுத்து இயக்குநர் பா.ரஞ்சித் முழுக்க, முழுக்க காதல் கதை ஒன்றை படமாக்கவிருக்கிறார். இந்தப் படத்துக்கு 'நட்சத்திரம் நகர்கிறது' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்பட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்கவிருப்பதாக தகவல் ஒன்று வைரலாகி வருகிறது. தன் படத்துக்கு சந்தோஷ் நாராயணனை மட்டும் இசையமைப்பாளராக பயன்படுத்தி வந்த ரஞ்சித் ஒரு படத்துக்கு மட்டும் இளையராஜாவை பயன்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே தனது படத்துக்கு தொடர்ச்சியாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாரை பயன்படுத்தி வந்த வெற்றிமாறன், விடுதலை படத்துக்காக இளையராஜாவுடன் இணைந்தது குறிப்பிடத்தக்கது.