காடையாம்பட்டி அருகே தன்னுடைய ஜோடி பாம்பு இறந்ததைக் கண்டு எங்கு நகராமல் இருந்த நல்ல பாம்பினால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே காருவள்ளி ஊராட்சியில் விவசாயி பிரபாகரன் சாமந்தி பூசெடிக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக தற்காலிக கிணறு அமைத்து அதில் தண்ணீரை நிரப்பி அதிலிருந்து சாமந்திப்பூ செடிக்கு தண்ணீர் பாய்ச்சி வருகிறார். இதையடுத்து நேற்று அவர் தனது சாமந்திப்பூ பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச தற்காலிக கிணற்றின் அருகே சென்று தண்ணீர் கேட் வால்வை திறந்துள்ளார். ஆனால் பைப்பில் இருந்து தண்ணீர் வெளியேறாமல் இருந்தது.
இதையடுத்து சந்தேகமடைந்த விவசாயி பைப்பை தட்டி பார்த்த போது பைப்பில் இருந்து இரண்டு பாம்புகள் சீறிக்கொண்டு வெளியே வந்தன. பின்னர் பாம்புகளை துரத்த மரக்கம்பை எடுத்து வரச் சென்று திரும்பிய போது இரண்டு பாம்புகளும் ஒன்றோடொன்று பிண்ணி பிணைந்து கொண்டு விளையாடிக் கொண்டிருந்து. இதையடுத்து சாரை மற்றும் நல்ல பாம்பு இரண்டும் பிண்ணி பிணைந்து கொண்டு விளையாடினால் அதை தடுக்க முயற்சிக்கக் கூடாது என்ற ஐதீகம் இருப்பதை அறிந்து ஒன்று செய்யாமல் விட்டுவிட்டார்.
இதையும் படிக்க- ராமேசுவரம் மீனவர்கள் 15 பேர் சிறைபிடிப்பு: மீனவ சங்கம் கண்டனம்
ஆனால் இரண்டு பாம்பில் சாரை பாம்பு விளையாடிய நிலையில் திடீரென மயங்கி தண்ணீரில் விழுந்து விட்டது. நல்லபாம்பு எங்கும் செல்லாமல் இறந்த பாம்பை பார்த்து கொண்டே இருந்ததால் விவசாயி உடனடியாக காடையாம்பட்டி தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்தார். பின்னர் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பாம்பு பிடிக்கும் கருவியால் நல்ல பாம்பை லாபமாக மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இறந்து கிடந்த சாரை பாம்பை பார்த்து கொண்டு நல்லபாம்பு அங்கிருந்து புறப்பட்டு செல்லாமல் அங்கேயே இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.