கோழிக்கோடு: கோழிக்கோட்டில் தெற்குக் கடற்கரையில் இன்று செப். 30 காலையில் இறந்த நிலையில் திமிங்கிலம் கரையொதுங்கியது.
கோழிக்கோட்டில் நல்ல மழை பெய்துவரும் நிலையில், கடலும் கொந்தளிப்பாகக் காணப்பட்டது.
காலையில் 10.15 மணியளவில் கடற்கரையில் இறந்த நிலையில் திமிங்கிலம் ஒதுங்கியிருப்பதை மீனவர் ஒருவர் பார்த்திருக்கிறார். மீன் அழுகத் தொடங்கிவிட்டது. உயிரிழந்து இரண்டு நாள்கள் இருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டார்.
திமிங்கிலம் ஒதுங்கிய தகவல் பரவியதும் ஏராளமான மக்களும் குழந்தைகளும் கடற்கரையில் திரண்டுவிட்டனர்.
இறந்த திமிங்கிலத்தைக் கூறாய்வுக்குப் பிறகு கடற்கரைப் பகுதியிலேயே புதைக்க உள்ளனர். உயிரிழக்கக் காரணத்தை அறிவதற்காக திமிங்கில உடலின் பகுதிகள் போபாலிலுள்ள தேசிய ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பிவைக்கப்படும் என துறை வட்டாரங்கள் தெரிவித்தன.