மதுரை: நடிகர் தனுஷ் தனது மகன் என சட்டப்போராட்டம் நடத்திய கதிரேசன்(79) உடல் நலக்குறைவு காரணமாக மதுரை அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை (ஏப்.12) காலமானார்.
மதுரை மேலூர் பகுதியைச் சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர் நடிகர் தனுஷ் தங்களது மகன் என்று மதுரை மாவட்ட மேலூர் நீதிமன்றத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு மனு தாக்கல் செய்தனர். அப்போது இந்த வழக்கு பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.
அந்த மநுவில், தனுஷ் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலகட்டத்திலேயே வீட்டைவிட்டு ஓடிவிட்டதாகவும், அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை என அவர்கள் தங்கள் மனுவில் தெரிவித்திருந்தனர்.
மேலும், அவர் இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் வளர்ப்பு மகனாக இருந்து நடிகரானது பிறகே தெரிய வந்ததாகவும், நடிகர் தனுஷ் எங்களது மகன் என்ற முறையில் பொற்றோரான எங்களது பராமரிப்பு செலவிற்காக மாதாமாதம் உதவித்தொகை வழங்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர். பல ஆண்டுகளாக இந்த சட்டப்போராட்டம் தொடர்ந்தது.
மதுரை மாவட்ட நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கதிரேசன் தரப்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த மனு மீது கடந்த மார்ச் 13 ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்றம், தவறான உள்நோக்கத்தில் மனுதாரர்களான கதிரேசன் - மீனாட்சி தம்பதி இந்த மனுவை தாக்கல் செய்தது மட்டுமின்றி குற்றச்சாட்டுகளை நிரூபிக்க உரிய ஆதாரங்களையும் தாக்கல் செய்யவில்லை என வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கதிரேசன் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
கதிரேசனின் வழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் தற்போதும் நிலுவையில் உள்ளது.