புதுதில்லி: பாஜகவின் தேர்தல் அறிக்கை மற்றும் நரேந்திர மோடியின் உரையில் பணவீக்கம், வேலையின்மை வார்த்தையே இல்லை என்று ராகுல் காந்தி விமரிசனம் செய்துள்ளார்.
புதுதில்லியில் பாஜக தலைமையகத்தில் ஞாயிற்றுக்கிழமை(ஏப்.14) ‘பிரதமர் மோடியின் கேரண்டி 2024’ என்ற பெயரில் பாஜக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டின் வளா்ச்சி குறித்து ஆக்கப்பூா்வமான கருத்து எதையும் தெரிவிக்காத பாஜகவின் தோ்தல் அறிக்கையை மக்கள் புறக்கணிப்பா் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் விமரிசனம் செய்துள்ளனர்.
இந்த நிலையில், பாஜகவின் தேர்தல் அறிக்கை விமரிசனம் செய்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், பாஜகவின் தேர்தல் அறிக்கை மற்றும் நரேந்திர மோடியின் உரையில் பணவீக்கம் மற்றும் வேலையின்மை ஆகிய இரண்டு வார்த்தைகள் இல்லை. மக்களின் வாழ்க்கை தொடர்பான மிக முக்கியமான பிரச்சனைகளை கூட விவாதிக்க பாஜக விரும்பவில்லை.
இந்தியா கூட்டணியின் நோக்கம் மிகவும் தெளிவானது. அரசுப் பணிகளில் காலியாக உள்ள 30 லட்சம் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு மற்றும் படித்த ஒவ்வொரு இளைஞருக்கும் நிரந்தர வேலை உறுதி.
இந்த முறை மோடியின் மாய வலையில் இளைஞர்கள் சிக்கப் போவதில்லை, இனி அவர்கள் காங்கிரசின் கரங்களை வலுப்படுத்தி நாட்டில் 'வேலைவாய்ப்பு புரட்சி'யை ஏற்படுத்துவர் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.