

'கில்லி' திரைப்படம் மறுவெளியீடு குறித்து நடிகை த்ரிஷா நெகிழ்ச்சியடைந்துள்ளார்.
நடிகர் விஜய்யின் சினிமா வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனைத் திரைப்படமாக அமைந்த படம் கில்லி. இயக்குநர் தரணி இயக்கத்தில் விஜய்-த்ரிஷா நடிப்பில் உருவான இப்படம் 2004 ஏப்ரல் 17 ஆம் தேதி திரைக்கு வந்தது. படம் வெளியாகி தமிழகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று பிளாக்பஸ்டர் ஆனது.
இப்படம் ரூ.50 கோடி வசூலித்த முதல் தமிழ்ப்படம் என்கிற சாதனையைப் படைத்ததோடு விஜய்யின் மார்கெட்டையும் உயர்த்தியது. இப்படத்துக்கு இசையமைப்பாளர் வித்யாசாகர் இசையமைத்திருப்பார். படத்துக்கு இவர் இசையமைத்த அனைத்துப் பாடல்களும் ஹிட் ஆனது. அதிலும் அப்படிபோடு, அர்ஜுனரு வில்லு ஆகிய பாடல்கள் இன்றளவும் ரசிகர்களால் அதிகம் கேட்கப்படுகிறது.
20 ஆண்டுகளுக்குப் பிறகு கில்லி திரைப்படம் 4கே டிஜிட்டல் தரத்தில் சுமார் 500 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இன்று மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளது. சக்தி ஃபிலிம் பேக்டரி இதனை வெளியிட்டுள்ளது. மறுவெளியீட்டிலும் இப்படத்திற்கு ரசிகர்கர்கள் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது.
இதுகுறித்து படத்தை வெளியிட்டுள்ள சக்தி ஃபிலிம் பேக்டரி, கில்லி முதல்நாள் வசூல் மட்டும் சில கோடிகள் அல்ல…பலகோடிகளை தொட வாய்ப்புள்ளது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. எனவே மறுவெளியீட்டில் வெளியான படங்களிலேயே கில்லி படம் புதிய வசூல் சாதனை படைக்கும் என்கிறார்கள்.
இந்த நிலையில் 'கில்லி' திரைப்படம் மறுவெளியீடு குறித்து நடிகை த்ரிஷா நெகிழ்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், வாழ்க்கை மீண்டும் தொடங்கிய இடத்திலேயே வந்து நிற்கிறது என்பதை இதைவிட சிறப்பாக சொல்லமுடியாது.
கில்லி முதல்நாள் முதல்காட்சி ப்ளாக் பஸ்டர் வைப்ஸ் உடன் இன்றைய பொழுது விடிந்துள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.