தேர்தல் தோல்வி பயமே பாஜக தலைவர்களின் மூர்க்கத்தனமான குற்றச்சாட்டுகளுக்கு காரணம் என தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், பாஜகவின் தீவிர ஆதரவாளர் கூட இதுபோன்ற அர்த்தமற்ற குற்றச்சாட்டுகளை நம்பமாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானின் டோங்க் பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாஜக பிரசார பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தாழ்த்தப்பட்டோா் (எஸ்சி), பழங்குடியின சமூகத்தினரின் (எஸ்டி) இடஒதுக்கீட்டை பறித்து, முஸ்லிம்களுக்கு வழங்க காங்கிரஸ் கட்சி முயன்றது என்று பிரதமா் நரேந்திர மோடி குற்றம்சாட்டினாா்.
மேலும், ‘காங்கிரஸ் ஆட்சியில் ஹனுமன் சாலிசா (ஹனுமன் துதி பாடல்) கேட்பதுகூட குற்றம்’ என்றும் ஆனால், பாஜக ஆட்சியில் மக்களின் நம்பிக்கை குறித்து யாரும் கேள்வியெழுப்ப முடியாது.
‘நாட்டு மக்களின் வளங்களைப் பறித்து, ‘குறிப்பிட்ட’ மக்களுக்கு விநியோகிக்க காங்கிரஸ் பெரும் சதித்திட்டத்தை தீட்டியுள்ளது.’ ஒரு தரப்பினரை திருப்திப்படுத்துதல், வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுவதே காங்கிரஸின் சித்தாந்தமாகும். நாட்டின் வளங்களில் முஸ்லிம்களுக்கே முதல் உரிமை உள்ளதாக முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் தனது உரையொன்றில் குறிப்பிட்டிருந்தாா். இது, தற்செயலான கருத்து அல்ல என்று பிரதமா் மோடி மீண்டும் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த நிலையில், தேர்தல் தோல்வி பயமே பாஜக தலைவர்களின் மூர்க்கத்தனமான குற்றச்சாட்டுகளுக்கு காரணம், அவர்களுக்காக நான் வருந்துகிறேன் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
தேர்தல் தோல்வி பயமே பாஜக தலைவர்களின் மூர்க்கத்தனமான குற்றச்சாட்டுகளுக்கு காரணம், அவர்களுக்காக நான் வருந்துகிறேன்.
மங்களசூத்திரம், ஸ்திரீதன், கோயில் சொத்துகளை கைப்பற்றி ‘குறிப்பிட்ட’ மக்களுக்கு விநியோகிக்க காங்கிரஸ் பெரும் சதித்திட்டத்தை தீட்டியுள்ளது போன்ற வினோதமான குற்றம்சாட்டுகளை எல்லாம் வேறு என்னவென்று செல்வது?
தாராளமயமாக்கலை அறிமுகப்படுத்தியது, சுதந்திரமான மற்றும் திறந்த பொருளாதாரத்தை ஆதரித்தது மற்றும் தனியார் நிறுவனங்களை ஊக்குவித்தது காங்கிரஸ் அரசு.
மாவோயிஸ்ட் அல்லது மார்க்சிஸ்ட் சித்தாந்தத்தால் காங்கிரசை தாக்கியதாக குற்றம் சாட்டுவது அபத்தத்திற்கு அப்பாற்பட்டது. பாஜகவின் தீவிர ஆதரவாளர் கூட இதுபோன்ற அர்த்தமற்ற குற்றச்சாட்டுகளை நம்பமாட்டார்கள்.
பாஜக தலைவர்களின் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் குறித்து ஆர்எஸ்எஸ் தலைவர்கள் தனிப்பட்ட முறையில் என்ன நினைப்பார்கள் என்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது.
மேலும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை மட்டுமே ஆதரித்த கருத்துகளை மோடியால் சுட்டிக்காட்ட முடியுமா? என்று கேள்வி எழுப்பியுள்ள சிதம்பரம், நாட்டில் அதிகம் பாதிக்கப்பட்டவர்களாக எஸ், எஸ்டி மற்றும் ஏழைகள் இருக்கிறார்கள். அவர்களுக்கான நீதி வழங்கும் திட்டங்கள் தான் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது என்று சிதம்பரம் தெரிவித்துள்ளார்.