கோவை: வெள்ளியங்கிரி மலை ஏறிய திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் கிராமத்தை சேர்ந்த பக்தர் புண்ணியகோடி(46) உடல்நலக்குறைவால் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் தென்கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி கோயிலுக்கு ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து வருகின்றனர். ஏழு மலைகளை தாண்டி சுயம்பு வடிவில் இருக்க கூடிய சிவலிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் வந்த வண்னம் உள்ளனர். பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கபட்டு உள்ள நிலையில் இந்த ஆண்டு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்தநிலையில்,ஞாயிற்றுக்கிழமை மதியம் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் கிராமத்தை சேர்ந்த புண்ணியகோடி (46) தனது நண்பர்கள் 10 பேருடன் அடிவாரத்தில் தரிசனம் முடித்து பூண்டி மலை ஏற தொடங்கினார். முதலாவது மலையில் ஏறியபோது திடீரென புண்ணியகோடிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்துள்ளார்.
இதுகுறித்து உடன் சென்றவர்கள் வனத் துறைக்கு தகவல் கொடுத்துவிட்டு கீழே அழைத்து வந்தனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அங்கிருந்து பூலுவபட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் உடற்கூராய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த ஆண்டு இதுவரை வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர்களில் 8 பேர் ஏற்கெனவே பலியாகியிருக்கும் நிலையில் தற்போது மேலும் ஒருவர் பலியாகியிருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.