ஜடேஜாவின் தவறினால் ரன் அவுட் ஆனது குறித்து பேசியுள்ளார் அறிமுக வீரர் சர்ஃபராஸ் கான்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று (பிப்ரவரி 15) ராஜ்கோட்டில் தொடங்கியது. இந்தப் போட்டியில் சர்ஃபராஸ் கான் அறிமுக வீரராக களமிறங்கினார்.
அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய சர்ஃபராஸ் 66 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து ரன் அவுட்டால் ஆட்டமிழந்தார். அதில் 9 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.
இந்த ரன் அவுட்டுக்கு வருத்தம் தெரிவித்து ஜடேஜா, “சர்ஃபராஸ் கானுக்கு நிகழ்ந்ததை நினைத்து வருத்தப்படுகிறேன். அது என்னுடைய தவறு. அவர் நன்றாக விளையாடினார்” எனப் பதிவிட்டிருந்தார்.
இது குறித்து பேசிய சர்ஃபராஸ் கான், “இதெல்லம் விளையாட்டின் ஒரு பகுதி. கிரிக்கெட்டில் இதுபோல நடப்பது இயல்பானது. சில நேரங்களில் ரன் அவுட் ஆகும்; சில நேரங்களில் ரன்களும் கிடைக்கும். உணவு இடைவேளையின்போது நான் ஜடேஜாவிடம் விளையாடும்போது ஆடுகளத்தில் என்னிடம் பேசுங்கள் எனக் கூறினேன். இது எனக்கு முதல்முறை. அவரும் நான் விளையாடும்போது என்னை ஊக்கப்படுத்தினார்” எனக் கூறினார்.
மன்னிப்பு கேட்ட ஜடேஜாவையும் பெருந்தன்மையாக எடுத்துக்கொண்ட சர்ஃபராஸையும் பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்திய அணி 2ஆம் நாளில் 124 ஓவரில் 415/9 ரன்கள் எடுத்துள்ளது.