செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் கந்தசாமி கோயிலில் மாசி பிரமோற்சவத்தையொட்டி, 7 ஆம் நாள் புதன்கிழமை திருத்தேரோட்டம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுத்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம். திருப்போரூர் கந்தசாமி கோயில் ஆழிசூழ் பூவுலகில் தர்மமிகு தொண்டை மண்டலத்தில் பழமையானதும் புராதான பெருமை கொண்டதும் யுத்தபுரி சமரபுரி சமரப்பதி எனும் காரணப்பெயர்களால் போற்றப்படுவதும் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் முப் பெருமைகளை கொண்டதுமான திருப்போரூர் திருத்தலத்தில் வள்ளி தெய்வானை உடன் உரையாய் மூலிகைகளாலான செதுக்காத திருமேனியாய் சுயம்பு வடிவில் நின்ற கோலத்தில் நாடி வரும் பக்தர்களுக்கு வேண்டும் வரம் தரும் வள்ளலாய் திகழும் விண்ணில் இருந்து போர் புரிந்த வரலாற்று சிறப்புமிக்க திருத்தலமாக விளங்கும் திருப்போரூர் கந்தசாமி கோயிலில் ஆண்டுதோறும் 12 நாள் பிரம்மோற்சவம் நடைபெறும்.
இந்த ஆண்டும் பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவத்தின் 7ஆம் நாளான புதன்கிழமை திருத்தேரோட்டம் நடைபெற்றது.
திருத்தேரோட்டத்தையொட்டி முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் முருகன் வள்ளி தெய்வானையுடன் வீற்றிருக்க பக்தர்கள் திருத்தேர் வடம் பிடித்து முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா அரோகரா அரோகரா என்ற கோஷத்தோடு தேரினை இழுத்து சுவாமியை தரிசனம் செய்தனர். 4 மாடவீதிகளை தேர் சுற்றி வர பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானை தரிசனம் செய்தனர்.
ஆன்மீக பக்தர்கள்,கோயில் நிர்வாகம் என ஆங்காங்கே வாகனங்களில் கொண்டு வந்த அன்னதானம், நீர் மோர்,தண்ணீர்,குளிர்பானங்களை வழங்கினர்.
தேரோட்டத்தை முன்னிட்டு நான்கு மாத வீதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தீயணைப்பு வாகனம் தயார் நிலையில் நிறுத்தப்பட்டது.இலவச மருத்துவ முகாம் கோயில் முன் நடத்தப்பட்டது. மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
விழாவிற்கான ஏற்படுகளை இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் லட்சுமி காந்த பாரதிதாசன், திருக்கோயில் செயல் அலுவலர் குமரவேல், மேலாளர் வெற்றி,கோயில் பணியாளர்கள், சிவாச்சாரியார்கள்,ஊர் பொதுமக்கள் மற்றும் ஸ்ரீபாதம் தாங்கிகள் செய்து வருகின்றனர்.
இரண்டு மணியளவில் தேர் நிலைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.