பேராவூரணி: தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே இளம்பெண்ணின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்துவிட்டு தப்பியோடிய இளைஞரை போலீசார் தேடிவருகின்றனர்.
பேராவூரணி பொன்காடு ஆனந்தவல்லி வாய்க்கால் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் மகள் சிவஜோதி(19), ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி பகுதியை சேர்ந்த காளீஸ்வரன் (23) என்பவர் பேராவூரணியில் தங்கி ஓட்டுநராக வேலைபார்த்து வந்தார்.
இந்த நிலையில், சிவஜோதியும், காளீஸவரனும் ஒருவரை ஒருவர் விரும்பிய நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு சொந்த ஊருக்கு சென்ற காளீஸ்வரன் அங்கு வேறு பெண்னை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார்.
இதுகுறித்து தகவல் தெரிந்த சிவஜோதி தொலைபேசியில் காளீஸ்வரனிடம் என்னை ஏமாற்றிவிட்டு வேறு பெண்னை எப்படி திருமணம் செய்யலாம் என சண்டை போட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காளீஸ்வரன் செவ்வாய்க்கிழமை இரவு சிவஜோதி வீட்டிற்கு குடிபோதையில் வந்து தகராறு செய்துள்ளார்.இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காளீஸ்வரன் குடிபோதையில் இருந்ததால் கண்டித்து அனுப்பியுள்ளனர்.
இந்த நிலையில், புதன்கிழமை அதிகாலை திரும்பவும் சிவஜோதி வீட்டிற்கு வந்த காளீஸ்வரன் தூங்கிக்கொண்டிருந்த சிவஜோதி தலையில் கல்லைப்போட்டுவிட்டு ஓடிவிட்டார். ரத்த வெள்ளத்தில் துடித்த சிவஜோதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலியானார்.
இது குறித்து பேராவூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான காளீஸ்வரனை தேடி வருகின்றனர்.