நடிகை கெளசல்யா மீண்டும் சின்னத்திரை தொடரில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
காலமெல்லாம் காதல் வாழ்க படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை கெளசல்யா. இவர் தொடர்ந்து நேருக்கு நேர், சொல்லாமலே, பிரியமுடன் போன்ற வெற்றிப் படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்தார்.
இவர் சந்தோஷ் சுப்பிரமணியம், பூஜை உள்ளிட்ட திரைப்படங்களில் பிரதான பாத்திரத்தில் நடித்திருந்தார். இதன் பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்ட கௌசல்யா தொலைக்காட்சி தொடர்களில் கவனம் செலுத்தி வந்தார்.
மனைவி, கண்டேன் சீதையை, அக்கா, அலைபாயுதே உள்ளிட்ட தொடர்களில் நடித்த கெளசல்யா, சினிமா மட்டுமில்லாமல் சின்னத்திரை ரசிகர்களிடையேயும் பிரபலமானார்.
இந்த நிலையில், தற்போது கெளசல்யா சுந்தரி தொடரில் பிரதான வேடத்தில் நடித்து வருகிறார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு கெளசல்யா சின்னத்திரை தொடரில் நடிப்பது அவரின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுந்தரி தொடரில் கேப்ரியல்லா, ஸ்ரீகோபிகா, ஜிஷ்ணு உள்ளிட்டோர் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்கின்றனர். அழகர் இந்தத் தொடரை இயக்குகிறார்.