
காரைக்குடி: காவல்துறை பொய் வழக்கு போடுவதாகக் கூறி, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தாய் மற்றும் மகள் இருவரும் வெள்ளிக்கிழமை தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பகுதியைச் சோ்ந்த சேட்டு மனைவி சரிதா(55). இவரது கணவா் உயிரிழந்துவிட்டாா். இரண்டு மகன் ஒரு மகளுடன் காரைக்குடி பகுதியில் நான்கு சக்கர வண்டியில் பழம் மற்றும் மீன் வியாபாரம் செய்து வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை தனது மகன் மனோஜ் குமார் மற்றும் குணா ஆகிய இருவரையும் காரைக்குடி காவல்துறையினர் பொய் வழக்குப் பதிவு செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இதையடுத்து இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க மகள் மகாலட்சுமியுடன் சரிதா வந்திருந்தார்.
திடீரென தனது கைப்பையில் கேனில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து, தங்கள் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். அப்போது அங்கு பணியில் இருந்த காவல் உதவி சிறப்பு ஆய்வாளர் அமுதா மற்றும் பத்திரிகையாளர்கள் தடுத்து நிறுத்தி, முதலுதவி அளிப்பதற்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இருவரையும் அனுப்பி வைத்தனர்.
இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், சம்பந்தப்பட்ட மனோஜ்குமார், குணா ஆகியோா் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அது குறித்த விசாரணைக்காக அழைத்துச் சென்றதாகவும் தெரிவித்தனர்.
தாய்,மகள் மண்ணெனையை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் ஆட்சியா் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.