
மாலத்தீவு அரசாங்கம் இஸ்ரேலியர்களுக்கு நாட்டுக்குள் வர தடை செய்ய முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சுற்றுலாவுக்குப் பெயர் பெற்ற நாடான மாலத்தீவில் இஸ்ரேலியர்கள் நுழையத் தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காஸாவில் நடக்கும் போரால் இஸ்ரேலின் மீது இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் மாலத்தீவின் மக்கள் அதிருப்தியில் இருப்பதாகத் கூறப்படுகிறது.
கடந்தாண்டு அக்டோபர் 7 முதல் இஸ்ரேல் நடத்தியத் தாக்குதலில் 36,439 பாலஸ்தீனர்கள் இதுவரை கொல்லப்பட்டதாகவும், 82,627 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், எதிர்க்கட்சிகளும், கூட்டணிக் கட்சிகளும் அதிபர் முகமது முயிசுவுக்கு அழுத்தம் கொடுத்து வந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை அதிபர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த உள்துறை அமைச்சர் அலி இஹுசன்,”இஸ்ரேலியக் கடவுச்சீட்டைப் (பாஸ்போர்ட்) பயன்படுத்தி மாலத்தீவுக்கு வருபவர்களைத் தடுக்க விரைவில் சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை முடிவெடுத்துள்ளது” என்று அறிவித்தார்.
தற்போது வெளியாகியுள்ள தகவல்களின் படி பாலஸ்தீன் விவகாரத்தில் மாலத்தீவு அமைச்சரவை சார்பில் எடுக்கப்பட்ட முக்கியமான 4 தீர்மானங்கள்:
1. பாலஸ்தீனத்துக்கு மாலத்தீவு மூலம் தேவைப்படும் உதவிகள் குறித்து விசாரிக்க சிறப்புத் தூதுவரை நியமித்தல்.
2. ஐக்கிய நாடுகளின் நிவாரணம் மற்றும் பணி நிறுவனம் மூலம் கிழக்குப் பகுதியிலுள்ள பாலஸ்தீன அகதிகளுக்கு நிதி சேகரித்தல்.
3. ’பாலஸ்தீனுக்கு ஆதரவளிக்கும் மாலத்தீவு மக்கள்’ என்ற தலைப்பில் நாடு முழுவதும் பேரணி நடத்துதல்.
4. மற்ற இஸ்லாமிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி பாலஸ்தீன் பிரச்னைக்குத் தீர்வு காணுதல்.
மாலத்தீவுக்கு ஆண்டுதோறும் 10 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இதில் இஸ்ரேலிலிருந்து 15,000 பயணிகள் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.