
புதுதில்லி: குவைத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் புதன்கிழமை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மத்திய இணையமைச்சர் எல். முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
குவைத்தின் மெங்காஃப் பகுதியில் உள்ள ஓா் அடுக்குமாடி குடியிருப்பில் ஒரே நிறுவனத்தில் பணியாற்றிய சுமாா் 200 போ் வசித்து வந்தனா். இந்தக் குடியிருப்பின் 6-ஆவது மாடியில் உள்ள வீட்டின் சமையலறையில் திடீரென தீப்பிடித்தது. இதனால் பெரும்புகை ஏற்பட்டு குடியிருப்பின் பிற பகுதிகளுக்கும் புகை பரவியது.
இந்த விபத்தில் குடியிருப்பில் வசித்த சுமாா் 49 போ் உயிரிழந்தனா். அவா்களில் 42 போ் இந்தியா்கள் என்று அறியப்படுகிறது. 50-க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்தனா் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த நிலையில், குவைத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் புதன்கிழமை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மத்திய இணையமைச்சர் எல். முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மத்திய இணையமைச்சர் எல். முருகன் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
குவைத் நாட்டில் உள்ள மாங்காப் பகுதியில், அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில், நமது நாட்டைச் சேர்ந்த 40 பேர் பலியாகியுள்ளனர் என்று முதற்கட்ட தகவலில் வருந்தத்தக்க செய்திகள் கிடைத்துள்ளது.
இந்த செய்தி கேட்ட உடனே பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி, வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வரதன் சிங்கை குவைத் நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு, இந்தியாவில் உள்ள அவர்களின் உறவினர்களிடம் விரைந்து சேர்க்கப்படும்.
30-க்கும் மேற்பட்ட காயமடைந்த இந்தியர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளும், நிவாரணங்களும் தகுந்த முறையில் செய்து தரப்படும்.
இறந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி..! என அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.