
மதுரை: மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டத்திலுள்ள மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து மற்றும் குதிரைவெட்டி ஆகிய பகுதியில் தேயிலை தோட்டம் அமைந்துள்ளது.
இந்த தோட்டப்பகுதிகளை 99 ஆண்டுகள் குத்தகைக்கு தி பாம்பே பா்மா டிரேடிங் காா்ப்பரேசன்(பி) லிமிடெட் என்ற தனியாா் நிறுவனம் எடுத்து, மேற்கண்ட வனப்பகுதியில் தேயிலை, காப்பி, ஏலக்காய், கொய்னா, மிளகு போன்ற பணப்பயிா்களை பயிரிட்டு வருகிறது.
அந்த பணிகளுக்காக தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் கேரள மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தொழிலாளா்கள் இங்குள்ள தேயிலை தோட்டங்களில் ஐந்து தலைமுறைகளாக இங்கேயே தங்கி கூலி வேலை செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் குத்தகை காலம் முடியும் தருவாயில் அந்த தனியாா் நிறுவனம் அங்கிருந்து வெளியேற திட்டமிட்டு, தொழிலாளா்களுக்கு விருப்ப ஓய்வுத் திட்டத்தை அறிவித்து ஜூன் 14ஆம் தேதிக்குள் அனைத்து தொழிலாளா்களும் கையெழுத்திடவேண்டும் என கட்டாயப்படுத்தி வருகிறது. மேலும் 7.8.2024-க்குள் தேயிலை தோட்டத்தில் இருந்து அனைவரும் வெளியேற வேண்டும் என நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் மாஞ்சோலையைச் சேர்ந்த அமுதா என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு வசதிகளை செய்து தரும்வரை யாரையும் வெளியேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. மத்திய மற்றும் மாநில அரசு தரப்பில் வெள்ளிக்கிழமை உரிய விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
மேலும் வழக்கு விசாரணையை ஜூன் 21-க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.