
மதுரை: மதுவிலக்கு சட்ட மசோதா நல்லது தான். ஆனால் பூரண மது விலக்கு என்பதே தீர்வு என தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
மேலவளவு ஊராட்சித் தலைவா் முருகேசன் உள்ளிட்ட 7 போ் படுகொலை செய்யபட்டதன் 26-ம் ஆண்டு நினைவுநாளையொட்டி அவா்களது நினைவிடமான விடுதலைகளம் மண்டபத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னையில் இருந்து விமான மூலம் தொல்.திருமாவளவன் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு கட்சித் தொண்டர்கள் விமான நிலையத்தில் வரவேற்பு அளித்தனர்.
பின்னர் அவர் செய்தியாளர்களுடன் பேசுகையில், உள்ளாட்சி அமைப்புகளில் சமூக நீதியை நிலை நாட்ட வேண்டும் என்ற அறப்போரில் முருகேசன் உள்ளிட்ட 7 போ் படுகொலை செய்யபட்டதன் 26-ம் ஆண்டு நினைவு நாள் இன்று. பலியானவர்களுக்கு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் படி போதிய இழப்பீடு வழங்க வேண்டும். மேலவளவில் ஊராட்சி தலைவராக தலித் வந்ததால் 1997 இல் படுகொலை நடந்தது. அப்போதைய அரசு அதற்கு இழப்பீடு வழங்கவில்லை. தற்போது வரை நிலுவையில் உள்ளது. இன்றும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் அவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரை ஆதரித்து 4 மற்றும் 5 ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பிள் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறோம். நான் இரண்டு நாட்கள் அந்த வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளேன்.
கள்ளச்சாராய உயிரிழப்பு என்பது தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன. இதற்கு பூரண மது விலக்கு ஒன்று தான் தீா்வாகும். அரசு மதுபானம் என்பது தீர்வாக இருக்க முடியாது. கள்ளச்சாராய சாவுகளால் ஏற்படுகிற பாதிப்பை விட சட்டபூர்வமாக அரசு விற்பனை செய்கிற மதுபானங்கள் மனிதவளத்தை பெருமளவில் சேதப்படுத்துகிறது. இளம் தலைமுறையினர் ஆற்றல் இழந்து பாழாகி வருகின்றனர். இதனால் ஏற்படுகிற பாதிப்பு தேசத்திற்கு பேரிழப்பு என்பதை அரசு உணர வேண்டும். ஆகவே மாநில அரசு மட்டுமின்றி மத்திய அரசும் மதுவிலக்கு கொள்கை குறித்து பரிசீலனை செய்ய வேண்டும். தேசிய அளவில் மதுவிலக்கு கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும். அப்போதுதான் கள்ளச்சாராயம் காய்ச்சுவதை தடுக்க முடியும்.
மெத்தானால் என்கிற விஷச்சாராயம் கள்ளச் சந்தையில் புழக்கத்தில் உள்ளது. அதற்கு பின்னால் ஒரு கும்பல் இயங்குகிறது. அந்த மெத்தனால் மாபியா கும்பல் யார் என்பதை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும். கள்ளச்சாராயம் விற்ற ஒரு சிலரை கைது செய்வது, கவனக்குறைவாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது என்பது போதுமான நடவடிக்கை அல்ல.
மதுவிலக்கு சட்ட மசோதா நல்லது தான். ஆனால் பூரண மது விளக்கை நடைமுறை படுத்த முதல்வர் முன்வர வேண்டும். முதல்வா் மு.க. ஸ்டாலின் மதுக் கடைகளை மூடுவதற்கு உத்தரவிட்டால், அது அரசுக்கும் திமுகவின் எதிர்காலத்திற்கு மக்களிடம் நற்பெயா் கிடைக்கும். குறிப்பாக தாய்மார்கள் நன்றி கடன் பட்டவர்களாக இருப்பார்கள்.
கள்ளக்குறிச்சிக்கு சென்ற போது, அங்குள்ள மக்கள் கள்ளச்சாராயத்தை ஒழியுங்கள் என்று கூறவில்லை. அரசு மதுபான கடைகளை மூட வேண்டும் என்பது தான் அவர்களது கோரிக்கையாக உள்ளது.
அரசு மதுபான கடைகளை படிப்படியாக மூட வலியுறுத்தி வருகிற செப்டம்பர் 17 ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மது ஒழிப்பு மகளிர் மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளோம். பல லட்சம் பேர் பங்கேற்கும் மாநாடாக அது அமையும்.
நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவரின் உரை உண்மைக்கு மாறான உரை. தவறான செய்திகளை குடியரசுத் தலைவரை பதிவு செய்வது அதிர்ச்சி அளிக்கிறது. அவர்கள் பெரும்பான்மை பெற்றதாகக் கூறுவது தவறு. கடந்த தேர்தலில் பெற்ற இடங்களை விட 63 இடங்கள் குறைவு.
ஆயோத்தி கோயில் உள்ள பைசாபாத் தொகுதியில் பாஜக தோல்வி அடைந்து உள்ளது. மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவும் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார்.
உள்நோக்கம் இல்லை
நடிகர் விஜய் மாணவர்களிடம் பேசியதில் மாணவர்களை ஊக்கப்படுத்தும் முறையாகவே நான் பார்க்கிறேன். அதில் பிழையும் உள்நோக்கமும் இருப்பதாகத் தெரியவில்லை. நல்ல தலைவர்கள் உருவாக வேண்டும் என அவா் கூறியது, மாணவர்களை நல்ல தலைவர்களாக உருவாக்க வேண்டும் என்று கூறியதாகவே நான் கருதுகிறேன்.
ரூ.10 லட்சம் இழப்பீடு
சிவகாசி வெடி விபத்தில் இறந்த நான்கு குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைக்கிறோம். அதை தமிழக முதல்வர் பரிசீலிக்க வேண்டும்.
நன்றிகடன்
காந்தியடிகள் கள் உட்பட எந்த மதுவும் கூடாது என்று தான் வலியுறுத்தி உள்ளாா். காங்கிரஸ் முழு மதுவிலக்கை வலியுறுத்துவது தான் காந்திக்கு செலுத்துகிற நன்றிகடனாக இருக்கும். கள்ளுக்கடையை திறக்க வேண்டும் என்பது கள் உற்பத்தியாளர்கள் கோரிக்கையாக இருக்கிறது. முதலில் தமிழக அரசு படிப்படியாக மதுபான கடைகளை மூட வேண்டும்.
ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்கு, அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் காவல் துறையில் தனி உளவுப் பிரிவு தொடங்க வேண்டும்.
மைக் ஆப் செய்வது வழக்கமான ஒன்றுதான்
மத்திய அரசு எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. ராகுல் காந்தியின் மைக் ஆப் செய்தது வழக்கமான ஒன்றுதான் வாடிக்கையான ஒன்றுதான் என்று அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.