
ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் சிலைக்கு அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்த சம்பவத்துக்கு தமிழக காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஆந்திர மாநில வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட தலைவரை இழிவுபடுத்துகிற வகையில் அவரின் சிலையை சேதப்படுத்தியதை விட நன்றி கெட்ட செயல் வேறு எதுவும் இருக்க முடியாது எனவும் விமர்சித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இளமைப்பருவம் முதல் காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்து ஆந்திர மாநிலம் முழுவதும் யாத்திரை மேற்கொண்டு மக்கள் நம்பிக்கை பெற்று அம்மாநிலத்தின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாக பணியாற்றியவர் மறைந்த ஒய். எஸ். ராஜசேகர ரெட்டி.
அம்மாநிலத்தில் பரவியிருந்த பிற்போக்கு சீர்குலைவு சக்திகளை முறியடித்து, ஆந்திர மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்றவர். ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அவரின் மறைவு ஆந்திர மாநிலத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கே பேரிழப்பு.
ஒன்றுபட்ட ஆந்திரத்தின் வளர்ச்சிக்கு அர்பணித்துக்கொண்ட மறைந்த ஒய். எஸ். ராஜசேகர ரெட்டியின் திருவுருவச் சிலையை தீவைத்து சேதப்படுத்தியிருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது.
ஒட்டுமொத்த ஆந்திர மாநில வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட மறைந்த தலைவரை இழிவுபடுத்துகிற வகையில் அவரது சிலையை சேதப்படுத்தியதை விட நன்றி கெட்ட செயல் வேறு எதுவும் இருக்க முடியாது.
அப்படிப்பட்ட செயலை செய்தவர்கள் எவராக இருந்தாலும் ஆந்திர மக்கள் அவர்களை மன்னிக்கவே மாட்டார்கள் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.