நஸ்லன், மமிதா பைஜூ நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிரேமலு. தண்ணீர்மாதன் தினங்கள், சூப்பர் சரண்யா படங்களை இயக்கிய கிரிஷ் ஏடி இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
நகைச்சுவை கலந்த காதல் திரைப்படமாக உருவான பிரேமலு கடந்த பிப்.9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இன்றைய கால கட்ட இளைஞர்களுக்கு நெருக்கமான கதைக்களத்தில் உருவான இப்படம் இதுவரை உலகளவில் ரூ.70 கோடிக்கும் அதிகமாக வசூலித்து ஆச்சரியப்படுத்தியுள்ளது.
சூப்பர் சரண்யாவில் அசத்திய மமிதா பைஜூ பிரேமலுவில் அட்டகாசம் செய்துள்ளார். இதனால், தென்னிந்திய சினிமாவில் கவனிக்கும் நடிகையாக உருவாகியுள்ளார் மமிதா.
படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நேர்காணல் ஒன்றில் பேசிய மமிதா பைஜூ, “வணங்கான் படப்பிடிப்பில் இயக்குநர் பாலா ‘வில்லடிச்சா மாடன்’ என்கிற பாடலுக்காக வாத்தியம் ஒன்றை வாசித்தபடி ஆடச் சொன்னார். ஆனால், நான் அதற்கு தயாராக இருக்கவில்லை. அதனால், சில டேக்குகள் எடுத்தேன். இதனால், கோபப்பட்ட பாலா என் முதுகில் அடித்தார். அதன்பின், அப்படத்திலிருந்து நான் விலகிக்கொண்டேன்.” எனக் குறிப்பிட்டிருந்ததாக தகவல் வெளியானது.
இதைக்கேட்டு, அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் பாலாவைக் கடுமையாக விமர்சித்தனர்.
இந்நிலையில் நடிகை மமிதா பைஜு இந்தச் செய்தியினை மறுத்துள்ளார். தனது இன்ஸ்டாகிராமில் மமிதா பைஜு கூறியதாவது:
என்னுடைய தமிழ்ப்படம் குறித்து இணையத்தில் பரவிவரும் செய்தி முற்றிலும் அடிப்படை ஆதாரமற்றது. படப் புரமோஷன் நேர்காணலின் ஒரு சிறியப் பகுதியைப் பிரித்தெடுத்து வேண்டுமென்றே தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் பாலாவுடன் படத்தின் முன்தயாரிப்பு வேலைகளில் இருந்து குறைந்தது ஒரு வருடம் வேலைப் பார்த்திருக்கிறேன். என்னைச் சிறந்த நடிகையாக மாற்ற, இயக்குநர் பாலா மிகவும் உதவிகரமாக இருந்தார். வணங்கான் படத்தில் எனக்கு உடல் ரீதியாக, மன ரீதியாக எந்தவிதமான தொந்தரவும் ஏற்படவில்லை என்பதை மீண்டும் பதிவு செய்கிறேன். எனக்கு வேறு படங்கள் இருந்ததால் மட்டுமே அதிலிருந்து விலகினேன். என்னைத் தொடர்புகொண்டு செய்தியை வெளியிட்ட நிறுவனங்களுக்கு நன்றி. உங்களது புரிதலுக்கு நன்றி எனக் கூறியுள்ளார்.