நடிகை யாமி கௌதம் ஆர்டிகள் 370 படத்தின் சண்டைக் காட்சிகளுக்கு காரணமானவர்கள் குறித்து பதிவிட்டுள்ளார்.
ஹிமாசலில் பிறந்த நடிகை யாமி கௌதம் முதலில் மாடலாக தனது வாழ்க்கையை ஆரம்பித்து பின்னர் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிப் படங்களில் நடித்துள்ளார். தற்போது ஹிந்தியில் முழுநேர நடியாக இருந்து வருகிறார். தனது முதல் ஹிந்தி படமான விக்கி டோனர் படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார்.
தமிழில் 2013இல் கௌரம் எனும் படத்திலும் 2016இல் ஜெய் உடன் தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும் படத்திலும் நடித்துள்ளார். தமிழில் பெரிதாக ஹிட் அடிக்காத இவரது படங்கள் ஹிந்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றன.
யாமி கௌதம், ப்ரியா மணி இணைந்து நடித்துள்ள ஆர்டிகள் 370 திரைப்படம் பிப்.23ஆம் தேதி வெளியாகியது. இந்தப் படத்தினை தயாரித்தது யாமி கௌதமின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படம் செவ்வாய்க்கிழமை வரை ரூ.44.60 கோடி வசூலித்துள்ளது. இதில் யாமி கௌதமின் சண்டைக் காட்சிகள் பெரிதும் கவனம் பெற்றுள்ளதாக விமர்சனங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து நடிகை யாமி கௌதம் தனது இன்ஸ்டாகிராமில், “ஆர்டிகள் 370 படத்தில் எனது மற்றும் குழுவின் நடிப்பு ராணுவம் தொடர்பான காட்சிகளில் நன்றாக இருக்கக் காரணம் ஓய்வு பெற்ற லெப்டினன்ட் கர்னல் கேஷ்வேந்திர சிங், என்எஸ்ஜி பூஷன் வர்தக், எங்களது ஆயுதப் பயிற்சியாளர் ஆகியோர்களது அனுபவமும் பயிற்சியும்தான்.
உங்களது வழிக்காட்டுதல்கள் மிகவும் விலை மதிப்பற்றது. உங்களது ஆதரவு, அறிவுப் பகிர்வுக்கு நான் எப்போதும் நன்றியுடன் இருப்பேன். ஆயுதப் பயிற்சிக் குறித்த இந்த அனுபவம் எப்போதும் என்னுடனிருக்கும்” எனக் கூறியுள்ளார்.
இந்த விடியோவில் பயிற்சி பெறும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அந்தக் கதாபாத்திரத்துக்கு ஏற்ற கச்சிதமான உடல் மொழி, துப்பாகிகளைக் கையாளும் விதம் என சரியாக அமைந்திருப்பதாகப் பலரும் பாராட்டி வருகிறார்கள்.
யாமி கௌதமின் அடுத்தப் படம் தூம் தாம். இந்தப் படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் களமிறங்குகிறார் யாமி கௌதம். இந்தப் படம் நகைச்சுவை படமாக உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.