சென்னை அம்பத்தூரில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை அம்பத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட ஒரகடம் பகுதியில் போதைப் பொருளை பாக்கெட் செய்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து ஆவடி மாநகர காவல் ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசார் ஞாயிற்றுக்கிழமை சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது, ஒரகடம் பகுதியில் போதைப் பொருளை விற்பனை செய்து வந்த ரமேஷ்,பாபு ஆகிய 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த 200 கிராம் மெத்தமிட்டன் போதைப்பொருளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் மேலும் பல கோடி ரூபாய் மதிப்புடைய மெத்தமிட்டன் போதைப் பொருள்கள் பெங்களூருவில் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் பெங்களூரு செல்ல திட்டமிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, மேலும் விசாரணை செய்துவருகின்றனர்.
கைப்பற்றப்பட்ட மெத்தமிட்டன் போதைப் பொருள்களின் மதிப்பு ரூ.15 லட்சம் என காவல்துறை தரப்பில் கூறப்பட்டது.