அரசியல் கட்சியினர் தமிழகத்தில் தண்ணீர் பந்தலை திறக்க தடை இல்லை என்று விளக்கமளித்துள்ள மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரத சாகு, அந்த நிகழ்வை வைத்து அரசியல் செய்யக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், தண்ணீர்பந்தல் திறப்பதற்கான அரசியல் கட்சிகளின் முன்மொழிவின் அடிப்படையில், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம், தேர்தல் நடத்தை விதிகளின் அடிப்படையில் முன்மொழியப்பட்ட முன்மொழிவுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை எனத் தெரிவித்துள்ளது. எந்தவொரு அரசியல் கட்சியும், வேட்பாளரும் இந்தச் செயல்பாட்டின் மூலமாக எந்த விதத்திலும் அரசியல் ரீதியாக பயன்பெறக்கூடாது எனவும், தண்ணீர்பந்தல் திறப்பின் போது தேர்தல் நடத்தை விதிகள் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
எனவே, தண்ணீர்பந்தல் திறக்க விரும்பும் எந்தவொரு அரசியல் கட்சியும், வேட்பாளரும், ஆணையத்தின் மேற்கண்ட வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு, சுகாதாரம், தூய்மையான குடிநீர் தொடர்பான அரசாங்கத்தின் பிற அறிவுறுத்தல்களைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும், அவர்களின் கோரிக்கையின் அடிப்படையிலும் தேர்தல் நடத்தை விதிகளைப் பின்பற்றியும் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அனுமதிக்கலாம்.
அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளும் அவரவருடைய எல்லைக்குள் தேர்தல் நடத்தை விதிகளைப் பின்பற்றி சரியான முறையில் தண்ணீர்பந்தல் செயல்பாடுகள் நடைபெறுகின்றதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் அரசியல் கட்சியினர் தமிழகத்தில் தண்ணீர் பந்தலை திறக்க தடை இல்லை என்றும் ஆனால் அந்த நிகழ்வை வைத்து அரசியல் செய்யக்கூடாது என்று மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரத சாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.