லக்னௌ: ஆகாஷ் ஆனந்தை தனது அரசியல் வாரிசாக அறிவித்ததை திரும்பப் பெற்றுக்கொள்வதாகவும், "அவர் அரசியல் ரீதியாக முதிர்ச்சி அடையும் வரை" கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனது அண்ணன் மகனான ஆகாஷ் ஆனந்தை தனது அரசியல் வாரிசாகவும், கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராகவும் மாயாவதி அறிவித்திருந்தார். நாடு முழுவதும் கட்சி பலவீனமாக உள்ள இடங்களில் வலுப்படுத்தும் பொறுப்பை கவனித்துக்கொள்வார் என்று மேலும் தெரிவித்தார்.
இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாத இறுதியில் சீதாபூரில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் பிரசார பேரணியின்போது ஆகாஷ் ஆனந்த் ஆட்சேபகரமான வார்த்தைகளை பயன்படுத்தியதாகவும், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக ஆகாஷ் மற்றும் நான்கு பேர் மீது ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து ஆகாஷ் ஆனந்தின் அனைத்து பிரசார பேரணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
என்ன பேசினார் ஆகாஷ்
சீதாபூர் தேர்தல் பிரசார பேரணியில், "இந்த அரசாங்கம் ஒரு புல்டோசர் அரசாங்கம் மற்றும் துரோகிகளின் அரசாங்கம்" என்றும் "தனது இளைஞர்களை பசியுடன் விட்டுவிட்டு, வயதானவர்களை அடிமைப்படுத்தும் கட்சி ஒரு பயங்கரவாத அரசாங்கம்" என்றதுடன் ஆப்கானிஸ்தானில் நடைபெறும் தலிபான் போன்று அரசாங்கம் நடத்துகிறது பாஜக என்று மேற்கோள் காட்டி பேசினார்.
இந்த நிலையில், மருமகன் ஆகாஷ் ஆனந்தை தனது அரசியல் வாரிசாக அறிவித்ததை திரும்ப பெற்றுக்கொள்வதாக அறிவித்துள்ள மாயாவதி, அவர் ‘அரசியல் ரீதியாக முதிர்ச்சி அடையும் வரை’ கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்படுவதாக என்று அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:
"பகுஜன் சமாஜ் கட்சி என்பது பாபா சாகேப் பீம்ராவ் அம்பேத்கரின் சுயமரியாதை மற்றும் சமூக மாற்றத்திற்கான இயக்கம் மற்றும் ஸ்ரீ கன்ஷி ராமும் நானும் அதைச் செய்துள்ளோம். எங்கள் முழு வாழ்க்கையையும் இதற்காக அர்ப்பணித்துள்ளோம், மேலும் ஒரு புதிய தலைமுறையும் அதற்கு உத்தவேகம் அளிக்க தயாராகி வருகிறது."
"கட்சியில் உள்ள மற்றவர்களை ஊக்குவிப்பதோடு, கட்சி மற்றும் இயக்கத்தின் பெரிய நலன் கருதி, ஆகாஷ் ஆனந்த் அரசியலில் முழு முதிர்ச்சி அடையும் வரை இந்த இரண்டு முக்கியப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக மாயாவதி தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில் ஆகாஷ் ஆனந்த் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டாலும் தனது சகோதரரும் அவரது தந்தையுமான ஆனந்த் குமார், முன்பு போலவே கட்சியில் தனது பொறுப்புகளை தொடர்ந்து நிறைவேற்றுவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மூன்றாம் கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் மாயாவதியின் இந்த திடீர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாநிலத்தின் தலித்துகளில் ஒரு பகுதியினரின் ஆதரவைப் பெற்றுள்ள பகுஜன் சமாஜ் கட்சி. இந்த தேர்தலில் தனித்து நிற்கிறது.
2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக அதிகாரப்பூர்வமாக அரசியலில் நுழைந்த ஆகாஷ் ஆனந்த் கட்சியின் முக்கிய முகமாக பேசப்பட்டவர். அதற்கு முன்பு பகுஜன் சமாஜ் கட்சியின் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர் 2017 உத்தரபிரதேச சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரசாரத்தில் தனது அத்தையுடன் பங்கேற்றார்.
பாஜக குறித்து ஆகாஷ் ஆனந்த் கடுமையாக விமர்ச்சித்து பேசியிருந்தது கடந்த வாரம்நாளிதழ்களில் தலைப்புச் செய்திகளாக இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.