தமிழ்நாடு மக்கள் வீடுகளுக்குப் பயன்படுத்தும் மின் இணைப்புகளில் 100 யூனிட் வரை வழங்கப்படும் விலையில்லா மின்சார திட்டப் பயனாளர்களை திமுக அரசு குறைக்க இருப்பதாக வெளியான செய்திக்கு, மின்வாரியம் குரங்கு கையில் சிக்கிய பூமாலை போல இந்த ஆட்சியில் சீரழிவதாக எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார்.
மின் இணைப்பு உள்ள வீடுகளுக்கு 100 யூனிட் வரை விலையில்லா மின்சாரம் கடந்த 2016 முதல் வழங்கப்பட்டு வருகின்றது. பெரும்பாலான இடங்களில் வீட்டு உரிமையாளரும், வாடகைக்கு குடியிருப்பவர்களும் தனித்தனி மின் இணைப்பு மூலம் இதுவரை 100 யூனிட் விலையில்லா மின்சாரத்தை பயன்படுத்தி வந்தனர்.
ஆனால், தற்போது வீட்டு உரிமையாளரின் பெயரில் ஒரு மின் இணைப்பு மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளதாகவும், அதற்கான ஆய்வுப்பணிகள் நடந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிப்பதாக எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தி.மு.க. ஆட்சிக்கு வரும்போதெல்லாம், தமிழக மின்சார வாரியமும், எரிசக்தித் துறையும், குரங்கு கையில் கிடைத்த பூ மாலையாக மாறி, சிக்கி சீரழிவது வாடிக்கையாகிவிட்டது.
தனியாரிடமிருந்து மின் கொள்முதல், மின் மாற்றிகள் மற்றும் மின் உபகரணங்கள் கொள்முதல், நிலக்கரி கொள்முதல் என்று எல்லா வகைகளிலும் கொள்ளையடிப்பதற்காகவே, செயற்கையான மின் தட்டுப்பாட்டை ஏற்படுத்துவது வசன வியாபாரிகள் அரசின் அடிப்படைக் கொள்கையாக இருக்கிறது. இதனால், மக்கள் அன்றாடம் இருளில் தவிக்கும் சூழல் ஏற்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தில் எந்த மாற்றமும் செய்யாமல் ஏழை மக்கள் பயன்பெற தற்போதுள்ள நிலையே தொடரவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.