
கோவை பெரியநாயக்கன் பாளையத்தில் மதுபோதை தகராறில் கல்லால் தாக்கி இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோவை பெரியநாயக்கன் பாளையம் வளமீட்பு பூங்காவையொட்டிய பகுதியில் இளைஞர் ஒருவர் தலையில் படுகாயங்களுடன் இறந்து கிடப்பதாக பெரிநாயக்கன்பாளையம் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர், தலையில் கற்கள் மற்றும் மது பாட்டிலால் தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த இளைஞரின் உடலை மீட்டு உடல்கூராய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கொலையானவர் கோவை, சித்தாபுதூர் வெங்கடசாமி சாலையை சேர்ந்த லோகநாதன் என்பவரின் மகன் கண்ணன் என்பது தெரியவந்தது. இவர் வேலைக்குச் செல்லாமல் இருந்துள்ளார்.
இந்த நிலையில், இரவு கண்ணன் சித்தாப்புதூரை சேர்ந்த தனது நண்பர்களான கார்த்திக், ரவீந்திரன், சதீஷ் உட்பட ஐந்து பேருடன் சேர்ந்து சித்தாப்புதூரில் உள்ள ஒரு பாரில் மது குடித்துள்ளனா். பின்னர் நண்பர்களுடன் வாடகை காரில் பெரியநாயக்கன் பாளையம் வளமீட்பு பூங்கா பகுதி அருகே வந்து உள்ளனர். அங்கு மீண்டும் மது குடித்துள்ளனா். போதை தலைக்கேறியதும் கண்ணன் மற்றும் நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, நண்பர்கள் கண்ணனை கருங்கல் மற்றும் பீர் பாட்டிலால் தலையில் பலமாக தாக்கி உள்ளனர். மேலும் பீர் பாட்டிலால் வயிற்று பகுதியிலும் குத்தி உள்ளனர். இதில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே கண்ணன் உயிரிழந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவரது நண்பர்கள் தப்பிச் சென்று தலைமறைவாகிவிட்டனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பெரியநாயக்கன்பாளையம் போலீஸாா், கண்ணன் நண்பர்களான கார்த்திக், ரவீந்திரன், சதீஷ் உள்பட 5 பேரை தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.