

பி.எம் ஶ்ரீ திட்டத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன், “பட்டர் பன்னும் ஜி.எஸ்.டி பில்லும்” என்று தலைப்பு தருவார்களா? மத்திய அரசுக்கு ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
புதிய கல்வி கொள்கையை ஏற்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. குளக்கல்வியை போதிக்கும் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த முடியாது என தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்து வருகிறது.
இதனால் பி.எம்.ஸ்ரீ பள்ளிகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டால்தான் சமக்ரசிக்க்ஷா திட்டத்திற்கான நிதியை ஒதுக்க முடியும் என மத்திய அரசு கூறி வருகிறது. தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு விடுவிக்காமல் இருந்து வருகிறது.
அண்மையில் தில்லி சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து சமக்ரசிக்க்ஷா திட்டத்திற்கான நிதியை உடனே வழங்க வேண்டும் என வலியுத்தினார். மேலும் புதிய கல்விக் கொள்கையை விட தமிழ்நாட்டின் கல்வி கொள்கை சிறப்பானது எனவும் தில்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதனிடையே, பிஎம் ஸ்ரீ திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள பள்ளிகளில், ஒரு தேசம் ஒரு தேர்தல், விக்ஷ்த் பாரத் போன்ற பாஜகவின் திட்டங்களை மாணவர்களிடையே போட்டியாக நடத்த வேண்டும் என மத்திய அரசு சுற்றறிக்கைக்கு அனுப்பியுள்ளது. இதற்கு, கல்வியாளர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில்,“பட்டர் பன்னும் ஜி.எஸ்.டி பில்லும்” என்று தலைப்பு தருவார்களா? என சு.வெங்கடேசன் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் சமூகவலைதள பக்க பதிவில், பிஎம் ஸ்ரீ திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள பள்ளிகளில் விவாத அரங்கு நடத்த “பட்டர் பன்னும் ஜி.எஸ்.டி பில்லும்” என்று தலைப்பு தருவார்களா?. அரசியல் சாசனத் திருத்தம் தேவைப்படும் பிரச்னையை மாணவர்களிடம் திணிக்க அது என்ன பள்ளிக் கூடமா? பாஜக பயிலரங்கமா?” என கேள்வி எழுப்பி இருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.