
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அருகே வங்கி ஏடிஎம் மையத்தில் உள்ள இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி - குப்பம் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் அருகே தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. இந்த ஏடிஎம் மையத்தின் இயந்திரத்தில் ரூ.12 லட்சத்தை வெள்ளிக்கிழமை வங்கியாளர்கள் வைத்துள்ளனர்.
இந்த நிலையில், சனிக்கிழமை காலை ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதை கண்ட மக்கள், இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம், இதுபோன்று நள்ளிரவில் வேறு எங்காவது நடைபெற்றுள்ளதா, எவ்வளவு பணம் கொள்ளை போனது என்பது குறித்து போலீசார் வங்கியாளர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கிருஷ்ணகிரி - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடித்த வடமாநில கும்பலை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் கர்நாடகம், தமிழகம், ஆந்திர மாநிலங்களில் ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து பணத்தை கொள்ளையடித்து வடமாநிலங்களுக்கு தப்பிச் சென்றது தெரியவந்தது.