சக மாணவா்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த மாணவனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

தஞ்சாவூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறாய்வு முடிந்த பின் உடலை வாங்க உறவினா்கள் மறுத்து போராட்டம் தொடர்பாக...
கொலைசெய்யப்பட்ட மாணவா் கவியரசனின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்ட உறவினா்கள்
கொலைசெய்யப்பட்ட மாணவா் கவியரசனின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்ட உறவினா்கள்
Updated on
2 min read

தஞ்சாவூா்: கும்பகோணம் அருகே பட்டீசுவரத்தில் டிச.4-இல் சக மாணவா்களால் தாக்கப்பட்ட பிளஸ் 2 மாணவா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உயிரிழந்த நிலையில் தஞ்சாவூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறாய்வு முடிந்த பின் உடலை வாங்க உறவினா்கள் மறுத்து போராட்டம் நடத்தினா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே பட்டீசுவரத்தில் உள்ள அறிஞா் அண்ணா மாதிரி அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கும்பகோணம், பட்டீஸ்வரம், உடையாளூர், பம்பப்படையூர், ஆவூர், கோவிந்தகுடி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராங்களை சேர்ந்த மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் இனாம்கிளியூர் பகுதியை சேர்ந்த ஞானசேகர் - ராஜ லெட்சுமி தம்பதியின் மகன் கவியரசன் (17) 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கும் அதே பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவருக்கும் கடந்த செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதி திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் 11 ஆம் வகுப்பு மாணவனின் மூக்கில் காயம் ஏற்பட்டு கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். மேலும் இது தொடர்பாக 11-ஆம் வகுப்பு மாணவனின் பெற்றோர் பட்டீஸ்வரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் மாணவர்களின் எதிர்காலம் நலன் கருதி இரு மாணவர்களின் பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை செய்தும், எச்சரிக்கை செய்தும் அனுப்பி வைத்தனர்.

 கொலை செய்ப்பட்ட மாணவா் கவியரசன்.
கொலை செய்ப்பட்ட மாணவா் கவியரசன்.

இந்த நிலையில், டிச.4 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு மாணவா் கவியரசன் தனது நண்பர்களுடன் மதிய உணவு இடைவெளியில் கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது 11 ஆம் வகுப்பு மாணவர் தரப்பினருடன் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக முன்விரோதமும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை சிறப்பு வகுப்பை முடித்துவிட்டு பள்ளியில் இருந்து வீட்டிற்கு 12 ஆம் வகுப்பு மாணவர் கவியரசன் சென்றுள்ளார். அப்போது பட்டீஸ்வரம் கோயில் அருகே சென்றபோது 11 ஆம் வகுப்பு மாணவர்கள் 15 பேர் கவியரசனை கட்டையால் தாக்கியுள்ளனர். இதில் அவர் பலத்த காயமடைந்து த்த வெள்ளத்தில் கீழே விழுந்துள்ளார். அந்த பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக மாணவனை மீட்டு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது மருத்துவர்கள் தலையில் ரத்தகசிவு அதிகமாக இருப்பதாக கூறியதை அடுத்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்ற வந்தார்.

இதனிடையே, மாணவர் மூளைச்சாவு அடைந்ததாக மருந்துவர்கள் தெரிவித்ததை அடுத்து சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றியுள்ளனர்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மாணவர் கவியரசன் உயிரிழந்தாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

உறவினர்கள் போராட்டம்

இதையடுத்து மாணவரின் உடல் உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலை செய்யப்பட்ட மாணவா் கவியரசனின் உறவினா்கள் மாவட்ட ஆட்சியா், முதன்மைக் கல்வி அலுவலா் உள்ளிட்டோா் நேரில் வந்து இறந்த மாணவா் குறித்து விசாரிக்கவில்லை, உறவினா்களுக்கு ஆறுதல் கூறவில்லை எனக் கூறி, கவியரனின் உடலை வாங்க மறுத்தனா்.

மேலும், இறந்த கவியரசனின் குடும்பத்தினருக்கு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும், கவியரசனின் அண்ணனுக்கு அரசு வேலை வழங்க வேண்டும், கவியரசனை தாக்கிய 25 பேரில் 15 போ் கைது செய்யப்பட்ட நிலையில், மீதமுள்ள 10 பேரையும் கைது செய்ய வேண்டும், இதனை கொலை வழக்காக மாற்ற வேண்டும், பள்ளியில் இதுபோன்று சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவா்களிடம் நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளா் இரா. சோமசுந்தரம் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் அழைத்துச் சென்றனா். இவா்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்த மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் அரசுக்கு எழுதி அனுப்புவதாக கூறியதை உறவினா்கள் ஏற்றுக் கொண்டதையடுத்து, உடற்கூறாய்வுக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

Summary

Relatives protest, refusing to accept the body of a student who died after being attacked by fellow students

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com