

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நவ.30 ஆம் தேதி வரை 42 சதவீதம் நிறைவடைந்துள்ளது என மத்திய இணையமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ் தெரிவித்துள்ளார்.
மதுரை தோப்பூரில் 220 ஏக்கர் பரப்பளவில் எய்ம்ஸ் மருத்துவமனைக் கட்டப்படும் என 2015-ம் ஆண்டு பிப்ரவரி அறிவிக்கட்டது. 2019 ஜனவரியில் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். மே 22, 2024 இல் தொடங்கப்பட்ட இந்த கட்டுமான பணிகள் இரண்டு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
முதற்கட்டமாக, கல்வி வளாகம், வெளிநோயாளர்களின் மருத்துவ சேவைகள், மாணவ,மாணவியர் தங்கும் விடுதிகள் மற்றும் அத்தியாவசிய சேவை கட்டடங்கள் போன்றவை முழு வீச்சில் இரவு, பகலாக நடைபெற்று வருகின்றன. அதனால் 2026 பொங்கல் பண்டிகையின்போது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று எய்ம்ஸ் நிர்வாக இயக்குநர் அனுமந்தராவ் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் மதுரை எய்ம்ஸ் குறித்த திமுக மக்களவை உறுப்பினர் அருண் நேருவின் கேள்விக்கு, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் 42 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், மருத்துவமனையை கட்டி முடிப்பதற்காக அக்டோர் 2026 இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ் தெரிவித்துள்ளார்.
நீடித்த நிலைத்தன்மையை மையமாகக் கொண்டு, உலகளாவிய தரநிலைக்கேற்ப கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், வரும் கல்வியாண்டு முதல் மருத்துவ மாணவர்களுக்கான வகுப்புகளையும், புறநோயாளிகள் பிரிவையும் தொடங்கும் அளவுக்கு பணிகள் முழு வீச்சில் இரவு, பகலாக நடைபெற்று வருகின்றன.
தற்போது மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி, ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி கட்டடத்தில் செயல்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.