
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் மாநில தகுதித் தேர்வு (செட்) வருகின்ற மார்ச் 6,7,8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வுகள் கணினி (CBT) வாயிலாக நடைபெறவுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
மாநில தகுதித் தேர்வினை (SET) தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக நடத்திட அரசு ஆணையிட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக, மாநில தகுதித் தேர்வினை வருகின்ற மார்ச் மாதம் 6,7,8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் கணினி (CBT) வாயிலாக நடத்த தமிழ்நாடு அரசு தேர்வு வாரியத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வுக்கான நுழைவுச் சீட்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் http://www.trb.tn.gov.in என்ற இணைய தள முகவரியில், தேர்வு தேதிக்கு 7 நாட்களுக்கு முன்னர் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணியில் சேருவதற்கு நெட்(NET) அல்லது செட்(SET) தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
நெட் தேர்வை யுஜிசி சார்பில் தேசிய தேர்வு முகமை நடத்தும் நிலையில் தமிழகத்தில் செட் எனப்படும் மாநில அளவிலான தகுதித்தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.