

புதுச்சேரி அருகே கலிங்க மலை ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோவில், புதுச்சேரி வரதராஜ பெருமாள் கோவில்களில் நடைபெற்ற பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ‘கோவிந்தா’ ‘கோபாலா’ என்ற கோஷம் முழங்க பக்தி பரவசத்துடன் ஸ்ரீரங்கநாதரை வழிபட்டனர்.
திருமாலுக்குரிய திவ்ய தேசங்கள் 108. அவற்றில் நாம் பூமியில் காண முடியாதது இரண்டு. ஒன்று வைகுண்டம் மற்றது பரமபதம். விஷ்ணுவை எப்போதும் பாடிப் பரவுகின்ற பக்தர்கள், பகவானின் தொண்டர்களாக வசிப்பது இந்தப் பரமபதத்தில்தான். அந்தப் பரமபதத்தில் பகவானுடன் உறையும் பெருமையைப் பெறுவதான வாயில்தான் பரமபத வாசல்,மார்கழியில் வரும் வைகுண்ட ஏகாதசியன்று உண்ணா நோன்பு இருந்து பரமபத வாசல் தரிசனம் செய்தால் எல்லா பலன்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
அதன்படி புதுச்சேரி அருகே கலிங்கமலையில் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலமான ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி உற்சவம் கடந்த 1-ஆம் தேதி பகல் பத்து திருவிழாவாக தொடங்கியது. அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் ஸ்ரீ ரங்கநாத பெருமாள் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பகல்பத்து திருவிழாவின் 10-ஆம் நாள் பரமபதநாதன் சேவையில் ஸ்ரீ ரங்கநாத பெருமாள் எழுந்தருளினர். தொடர்ந்து திருமங்கையாழ்வார் திருவடி தொழல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதையும் படிக்க | ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பரமபத வாசல் திறப்பு!
தொடர்ந்து வைகுண்ட ஏகாதசியையொட்டி வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு துலாம் லக்னத்தில் பரமபத வாசல் திறக்கப்பட்டது. பாமா, ருக்மணி சமேதராக ஸ்ரீ ரங்கநாத பெருமாள் சுவாமி பரம நாதனாக சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருமாலின் இருப்பிடமாகக் கருதும் வைகுண்டத்தின் சொர்க்க வாசலை திறந்தபோது அதிகாலை முதலே வருகை புரிந்து இருந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் மக்கள் சொர்க்கவாசலுக்குள் நுழைந்து கோபாலா, கோவிந்தா என பக்தி கோஷம் முழங்க ஸ்ரீரங்கநாத பெருமாள் பக்தி பரவசத்துடன் வழிபட்டு சென்றனர். இதில் திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் உள்ளிட்ட ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.
இதே போல் புதுச்சேரி வரதராஜப் பெருமாள் கோவில், முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவில், எம்.எஸ். அக்ரகாரம் வீர ஆஞ்சநேயர் கோதண்டராமர் கோவில், கொம்பாக்கம் வேங்கடாசலபதி பெருமாள் கோவில், வடுக்குப்பம் வெங்கடேச பெருமாள் கோவில் உள்பட புதுச்சேரியில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. அதிகாலை 5 மணி முதல் பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.