டங்ஸ்டன் விவகாரத்தில் கிடைத்த வெற்றி நமக்கான வெற்றி: முதல்வர் ஸ்டாலின்

டங்ஸ்டன் விவகாரத்தில் கிடைத்த வெற்றி நமக்கான வெற்றி என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின்
முதல்வர் மு.க. ஸ்டாலின்
Published on
Updated on
2 min read

மதுரை: டங்ஸ்டன் விவகாரத்தில் கிடைத்த வெற்றி நமக்கான வெற்றி என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

மதுரை மாவட்டம், மேலூா் வட்டத்துக்குள்பட்ட 11 கிராமங்களை உள்ளடக்கி 5,500 ஏக்கா் பரப்பில் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏல உரிமையை உடனடியாக இரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு இந்த திட்டம் ரத்து செய்யப்பட காரணமாக இருந்தமைக்காக மதுரை மாவட்டம், மேலூர் வட்டம் – அரிட்டாபட்டி, வல்லாளப்பட்டி, கிடாரிப்பட்டி, நரசிங்கம் பட்டி, நாயக்கர்பட்டி, செட்டியார் பட்டி, தெற்கு தெரு, மீனாட்சிபுரம், மாங்குளம் உள்ளிட்ட பகுதிகளைச் சார்ந்த பொது மக்கள் சார்பில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு ஞாயிற்றுக்கிழமை (ஜன.26) நன்றி அறிவிப்பு, பாராட்டு விழா நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டது.

அரிட்டாபட்டி மற்றும் வல்லாளபட்டி ஆகிய கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணியளவில் நடைபெற்ற நன்றி அறிவிப்பு, பாராட்டு விழா நிகழ்ச்சியில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.

அப்போது, டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்யப்பட்டதை அடுத்து, அரிட்டாபட்டியை சேர்ந்த முன்னவர்கள் என்னை நேரில் சந்தித்து, அரிட்டாபட்டிக்கு நீங்கள் வரவேண்டும். உங்களுக்கு பாராட்டு விழா நாங்கள் முன்னெடுக்க இருக்கிறோம் என்றார்கள். அன்புக் கட்டளையை ஏற்றுக்கொண்டு இங்கு வந்துள்ளேன். உங்களுக்காக நடக்கும் பாராட்டு விழா என்றுதான் இதைக் கருதுகிறேன். நான் வேறு, நீங்கள் வேறல்ல. உங்கள் மகிழ்ச்சியில் பங்கேற்க நான் இங்கு வந்துள்ளேன்.

இங்கு பாராட்டு பெறக்கூடியவர்கள் மக்கள் தான். நாங்கள், நீங்கள் என்று பார்க்காமல், டங்ஸ்டன் ரத்தை நமக்கான வெற்றியாகவே பார்க்கிறேன்.

டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக மதுரை மக்கள் கொடுத்த அழுத்தமும், அதனை உணர்ந்து மக்களால் உருவான திராவிட மாடல் அரசு, அதாவது உங்களில் ஒருவனாக இருக்கக்கூடிய எனது தலைமையிலான அரசால் கொடுத்த அழுத்தமும் இணைந்து தற்போது டங்ஸ்டன் திட்டம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்ற மத்திய அரசின் அறிவிப்புடன் வெற்றி கண்டுள்ளோம். மக்களால் உருவாக்கப்பட்டது திராவிட மாடல் ஆட்சி.

மக்கள் விரோத செயல்களை பாஜக செய்கிறது

மக்களுக்கு விரோதமான செயல்களை மத்தியில் ஆளும் பாஜக அரசு செய்து வருகிறது. அதனை மக்கள் சக்தி மூலம் டங்ஸ்டன் திட்டத்தை நிறுத்தியுள்ளோம்.

சாதாரண வெற்றி அல்ல!

மத்தியில் ஆளும் பாஜக அரசை கண்டித்து தில்லியை நோக்கி விவசாயிகள் போராட்டம் 2 ஆண்டுகளுக்கு மேல் நடந்தது, நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிரான உங்களது போராட்டம் மூன்று மாதத்தில் வெற்றி பெற்றுள்ளது. நமக்கு கிடைத்திருக்கிற இந்த வெற்றி சாதாரண வெற்றி அல்ல. மக்கள் போராட்டத்திற்கும், தமிழக அரசின் அழுத்தத்திற்கு பணிந்து மத்திய பாஜக அரசு திட்டத்தை ரத்து செய்திருக்கிறது. இதற்கு காரணம், மக்களாகிய நீங்களும், தமிழக அரசின் கடுமையான எதிர்ப்பும் தான்.

பதவியைப் பற்றி கவலையில்லை

பதவியைப் பற்றி எனக்கு கவலையில்லை. மக்களைப் பற்றியும், அவர்களின் பிரச்னையைப் பற்றி மட்டும்தான் எனக்கு கவலை.

எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம்

உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம். எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். இது கலைஞரால் உருவாக்கப்பட்ட ஆட்சி, பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் வழிகாட்டுதலில் நடக்கக்கூடிய ஆட்சி, உங்களில் ஒருவனாக இருக்கக்கூடிய மு.க.ஸ்டாலினின் ஆட்சி என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com