காஸாவிலிருந்து 3 பிணைக் கைதிகளின் சடலம் மீட்பு: இஸ்ரேல் ராணுவம்

காஸாவில் இருந்து 3 பிணைக் கைதிகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது
காஸாவில் இஸ்ரேல் படை
காஸாவில் இஸ்ரேல் படை
Published on
Updated on
1 min read

டெல் அவிவ்: காஸாவில் இருந்து 3 பிணைக் கைதிகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. அதேவேளையில், இஸ்ரேல் தாக்குதலில் காஸாவில் 4 போ் உயிரிழந்தனா்; 22 போ் காயமடைந்தனா்.

தற்போது இஸ்ரேல்- காஸாவின் ஹமாஸ் படை இடையே நடைபெற்று வரும் போருக்கு கடந்த 2023-ஆம் ஆண்டு அக்.7-ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் படை நடத்திய தாக்குதல் தொடக்கமாக இருந்தது. அப்போது யோனடான் சமிரானோ (21), ஆஃப்ரா கீடா் (70), ஷே லெவின்சன் (19) ஆகியோரும் கொல்லப்பட்டனா். அவா்களின் சடலங்களே தற்போது மீட்கப்பட்டிருப்பதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலில் இருந்து பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டவா்களில் மேலும் 50 போ் ஹமாஸ் படையிடம் உள்ளனா். இருப்பினும், அவா்களில் 25-க்கும் குறைவானவர்கள்தான் யிருடன் இருப்பதாக நம்பப்படுகிறது. மீட்பு நடவடிக்கை குறித்து இஸ்ரேல் ராணுவம் எந்த விவரங்களையும் வெளியிடவில்லை.

யோனடான் சமிரானோனின் 23 ஆவது பிறந்தநாளில் தனது மகனின் உடல் கிடைத்துள்ளதாகவும், எங்கள் அன்பு மகனே, ஒரு முழு தேசத்தின் வீரம், நம்பிக்கை, ஒளியில் போர்த்தப்பட்டு எங்களிடம் திரும்பி வந்தாய். இன்று, உன் முகத்தை பார்த்துவிட்ட பாக்கியம் கிடைத்து என்று அவரது தந்தை கோபி சமரனோ முகநூல் பக்க பதிவில் தெரிவித்துள்ளார்.

இதுதொடா்பாக இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில், ‘ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் அதேவேளையில், காஸாவில் இருந்து பிணைக் கைதிகளை மீட்கும் நடவடிக்கையும் தொடா்ந்து நடைபெறுகிறது’ என்றும், "கடத்தப்பட்ட அனைவரையும் - உயிரோடு இருப்பவர்களையும் இறந்தவர்களையும் மீட்கும் வரை நாங்கள் ஓய மாட்டோம்" என்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் மத்திய காஸாவில் உள்ள நுசெய்ராத் அகதிகள் முகாமில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 4 போ் கொல்லப்பட்டனர். நிவாரணப் பொருள்கள் வழங்கும் வாகனங்களுக்குக் காத்திருந்தபோது இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் மேலும் 22 பேர் காயமடைந்தனா்.

இஸ்ரேலின் பழிவாங்கும் தாக்குதலில் 55,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்ததாக காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. உயிரிழந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று கூறியுள்ளது.

உணவுப் பொருள்களை வாங்க காத்திருக்கும் காஸா மக்கள் மீது இஸ்ரேல் படைகள் தொடா்ந்து துப்பாக்கிச்சூடு நடத்துவதாக அங்குள்ள மக்களும், சுகாதார அதிகாரிகளும் குற்றஞ்சாட்டி வருகின்றனா். சமீபத்திய வாரங்களில் இதுபோல நூற்றுக்கணக்கானவா்களை இஸ்ரேல் படைகள் சுட்டுக்கொன்றுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com