
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 3 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் பலியாகியுள்ளனர்.
சேனாபதி மாவட்டத்திலுள்ள சங்கோபங் கிராமத்தின் அருகில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் சென்ற வாகனம் பள்ளத்தினுள் கவிழ்ந்தது. இதில், 2 வீரர்கள் சம்பவயிடத்திலேயே பலியான நிலையில், பலத்த காயமடைந்த வீரர் ஒருவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் பரிதாபமாக பலியானார்.
மேலும், இந்த விபத்தில் 13 பேர் படுகாயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரது உடல் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: எலான் மஸ்க் உடன் இணையும் ஏர்டெல்!
இதனைத் தொடர்ந்து, பலியான 3 வீரர்களின் உடல்களும் சேனாபதி மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
இந்நிலையில், இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள மணிப்பூர் மாநில ஆளுநர் அஜய் குமார் பல்லா, படுகாயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய வேண்டுவதாக தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.