
கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க 297 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
2025-26 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலையை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று(மார்ச் 15) காலை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
பேரவையில் பேசிய அவர்,
"சர்க்கரை ஆலைகளுக்கு 2024-2025 அரவைப்பருவத்திற்கு கரும்பு வழங்கிய உழவர்களுக்குச் சிறப்பு ஊக்கத் தொகை வழங்கப்படும்.
தமிழ்நாட்டில் கரும்பு சாகுபடிப் பரப்பு, உற்பத்தியினை அதிகரித்து சர்க்கரை ஆலைகள் இயக்கத்திற்கு உறுதுணையாக இருக்கவும் கரும்பு உழவர்கள் கூடுதல் வருவாய் பெறும் வகையிலும் 2024 - 2025 அரவைப் பருவத்திற்கு சர்க்கரை ஆலைகளுக்குப் பதிவு செய்து கரும்பு வழங்கிய தகுதியுள்ள உழவர்களுக்கு, மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள நியாயமான மற்றும் ஆதாய விலைக்கு மேல், முன் எப்போதும் இல்லாத அளவில், டன் ஒன்றுக்கு 349 ரூபாய், சிறப்பு ஊக்கத்தொகையாக உயர்த்தி வழங்கப்படும்.
இதனால் கரும்புக்கு டன் ஒன்றிற்கு 3,500 ரூபாய் வழங்கப்பட்டு, சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் கரும்பு உழவர்கள் பயன்பெறுவர். இதற்கென 297 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
கரும்பு சாகுபடி மேம்பாட்டுத் திட்டம்
அதிக சர்க்கரைக் கட்டுமானம், பூச்சி, நோய்த் தாக்குதலுக்கு எதிர்ப்புப் பண்புகளைக் கொண்ட புதிய கரும்பு ரகங்களை உழவர்கள் அதிக பரப்பில் சாகுபடி செய்திடவும். சாகுபடி செலவைக் குறைக்கும் விதமாக கரும்பு விதைக்கரணைகள். நாற்றுகள், இயந்திர அறுவடைக்கு ஏற்ற அகலப்பார் நடவு முறை. நுண்ணூட்ட உரக்கலவை, தோகை தூளாக்குதல், நிலப்போர்வை அமைத்தல் போன்ற இனங்களை கரும்பு உழவர்களுக்கு மானிய விலையில் வழங்கவும் மத்திய, மாநில அரசு நிதியிலிருந்து 10 கோடியே 53 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்" என்று அறிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.