
ஈரோடு: சிவகிரி அருகே கிராமத்தில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதியர் கொலை அதிர்ச்சி அளிக்கிறது. இதுதான் சட்ட-ஒழுங்கு சிறப்பாக இருக்கும் லட்சமணமா என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து வந்த ராமசாமி- பாக்கியம் தம்பதியினர் படுகொலை செய்யப்பட்டு, 15 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
காவல்துறை மானியக் கோரிக்கையின் போது, "சட்டம் -ஒழுங்கு சிறப்பாக உள்ளது" என்று பெருமை பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே- இது தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் லட்சணமா?
திமுக ஆட்சிக்கு வந்தது முதல் இதே பகுதியில் 2022 மே 1 ஆம் தேதி ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே முதியவரை கடப்பாரையால் தாக்கி கொலை; 27 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
2023 செப்டம்பர் 9 ஆம் தேதி ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே கொடூர ஆயுதங்களால் வயதான தம்பதி அடித்துக் கொலை; 15 சவரன் நகை மற்றும் ரூ.60 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது.
2024 நவம்பர் 29 ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் அடித்துக் கொலை செய்யப்பட்டனர்.
2025 மார் 13 ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே வயதான தம்பதி வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.
2025 ஏப்ரல் 14 ஆம் தேதி ஈரோடு மாவட்டம் தாளவாடியில் பாட்டி மற்றும் பேரன் அடித்துக் கொலை செய்யப்பட்டனர்.
இது போன்ற தொடர் கொலை, கொள்ளை சம்பவங்களை "தனிப்பட்ட ஒன்று இரண்டு விஷயங்கள்" என்பதற்கு இந்த ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு வெட்கமாக இல்லையா?
தமிழ்நாட்டு மக்கள் இரவில் நிம்மதியாக தூங்க முடியாமல் உயிரைக் கையில் பிடித்து வைத்திருக்கும் அச்ச நிலைக்கு தள்ளிய திராவிட மாடல் ஸ்டாலின் அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி,
இந்த கொலை- கொள்ளையில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், இந்த அரசு இனியேனும் மாய உலகில் இருந்து வெளிவந்து, சட்டம்-ஒழுங்கைக் காக்கும் தன் முதற்பணியை முறையாக செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.