

சத்தீஸ்கர் மாநிலம், பிலாஸ்பூர் ரயில் நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் துரதிர்ஷ்டவசமாக சரக்கு ரயிலின் பின்புறத்தில் பயணிகள் ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 11பேர் பலியாகினர்; 20 பேர் பலத்த காயமடைந்தனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
கோர்பா மாவட்டத்தில் உள்ள கெவ்ரா ரயில் நிலையத்தில் இருந்து பிலாஸ்பூர் ரயில் நிலையம் நோக்கி மெமு பயணிகள் ரயில் சென்றுகொண்டிருந்தது. அப்போது கதோரா-பிலாஸ்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே அதே தடத்தில் முன்னால் சென்ற சரக்கு ரயிலின் பின்புறத்தில் பயணிகள் ரயில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பயணிகள் ரயிலின் முதல் பெட்டி மற்றும் கடைசி பெட்டி சரக்கு ரயிலின் மேல்பகுதிக்குச் சென்றதுடன் இரு ரயில்களின் பல்வேறு பெட்டிகள் தடம்புரண்டன.
விபத்தில் சிக்கி 11 பேர் பலியாகினர், 20 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப் படையினர், மாவட்ட நிர்வாகத்தினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரயில் விபத்து தொடர்பாக உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை ரயில்வே நிர்வாகம் செய்து வருகிறது. மூத்த ரயில்வே அதிகாரிகள் நிலைமையைக் கண்காணித்து வருவதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர்.
ரயில் விபத்தில் இறந்தவர்கள் விவரம்: இதனிடையே, விபத்தில் பலியானவர்களின் பெயர் தெரியவந்துள்ளது. அதில், மதுரா பாஸ்கர் (55), சௌரா பாஸ்கர்(50), சத்ருகன்(50), கீதா தேப்நாத் (30), மெஹ்னிஷ் கான்(13), சஞ்சீ கான்(13), சந்தோஷ் ஹன்ஸ்ராஜ்(60), ரஷ்மி ராஜ்(34), ரிஷி யாதவ்(2), துலாரம் அகர்வால்(60), ஆராதனா நிஷாத்(16), மோகன் ஷர்மா(29), அஞ்சுலா சிங்(49), சாந்தா தேவி குமார்(49), அசோக் குமார் தீட்சித்(54), நீரஜ் தேவாங்கன்(53) மற்றும் ராஜேந்திர மாருதி பிசாரே(60) .
முதல்வர் இரங்கல்: ராய்ப்பூரில் சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தேவ் சாய் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, "விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். அவர்களுக்கு இலவசமாக தேவையான அனைத்து உயிர் காக்கும் தீவிர சிகிச்சைகளை அளிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன்.
ரூ.5 லட்சம் நிவாரணம்: ரயில் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிவாரண உதவி வழங்கப்படும். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தர மாவட்ட நிர்வாகத்துக்கு அறிவுறுத்தியுள்ளேன் என கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.