

வாழப்பாடி: வாழப்பாடி அருகே சொத்து தகராறில் அண்ணனை தம்பி உருட்டுக்கட்டையால் தாக்கியதில் 9 நாள்கள் சிகிச்சைக்கு பின் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இரவு அண்ணன் உயிரிழந்தார்.
சேலம் மாவட்டம், வாழப்பாடி அடுத்த காட்டுவேப்பிலைப்பட்டி ஊராட்சி சேஷன்சாவடி பெருமாள் கோயில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சின்னய்யன் மகன்கள் ராஜேந்திரன்(55), ஆறுமுகம் (45). கூலித்தொழிலாளிகளான இருவருக்கும் திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். ஆனால் இருவரது மனைவி மற்றும் குழந்தைகளும் பிரிந்து சென்று விட்டனர்.
அண்ணன்-தம்பி இருவருக்கும் சொந்தமான ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த அக். 28-ஆம் தேதி, இந்த வீடு தொடர்பாக அண்ணன்-தம்பியிடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது வீட்டிலிருந்து வெளியேறுமாறு அண்ணன் ராஜேந்திரன் கூறியதால் ஆத்திரமடைந்த அவரது தம்பி ஆறுமுகம், உருட்டுக்கட்டையால் அண்ணனை கடுமையாக தாக்கியுள்ளார்.
இதில், ராஜேந்திரனுக்கு இரண்டு கால்களிலும் முறிவு ஏற்பட்டதோடு, தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டதை அடுத்து மயங்கி விழுந்த ராஜேந்திரனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வாழப்பாடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், 9 நாள்களுக்கு பின் சிகிச்சை பலனின்றி கூலித் தொழிலாளியான ராஜேந்திரன் பரிதாபமாக புதன்கிழமை இரவு உயிரிழந்தார்.
இதனையடுத்து, சொத்து தகராறில் ஆத்திரமடைந்து அண்ணனை அடித்துக் கொலை செய்ததாக கொலை வழக்குப் பதிவு செய்த வாழப்பாடி போலீஸார், அவரது தம்பி ஆறுமுகத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.