புதுச்சேரி பனித்திட்டு பகுதி கடலில் முதல் முறையாக பயிரிடப்பட்ட கடற்பாசி அறுவடை!

புதுச்சேரி பனித்திட்டு பகுதி கடலில் முதல் முறையாக பயிரிடப்பட்ட கடற்பாசி வியாழக்கிழமை(நவ.20) அறுவடை செய்யப்பட்டது.
புதுச்சேரி பனித்திட்டு பகுதி கடலில் முதல் முறையாக பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்பட்ட கடற்பாசி
புதுச்சேரி பனித்திட்டு பகுதி கடலில் முதல் முறையாக பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்பட்ட கடற்பாசி
Published on
Updated on
1 min read

புதுச்சேரி பனித்திட்டு பகுதி கடலில் முதல் முறையாக பயிரிடப்பட்ட கடற்பாசி வியாழக்கிழமை(நவ.20) அறுவடை செய்யப்பட்டது.

கடற்கரையோரம் வாழும் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் விதமாக, பிரதமர் மோடியின் கனவு திட்டமான கடற்பாசி வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை, புதுச்சேரி பிராந்தியத்தில் செயல்படுத்தும் விதமாக, புதுச்சேரி அரசு, மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தினுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களில் தலா இரண்டு மீனவ கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு, கடற்பாசி வளர்ப்பு முன்னோடி திட்டம் துவங்கப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக, ஏம்பலம் தொகுதி பனித்திட்டு மீனவ கிராமத்தில் கடலில் கடற்பாசி வளர்க்கும் திட்டம் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி துவங்கப்பட்டது. இதில், ஏற்கனவே காரைக்கால் கடல் பகுதியில் அறுவடை மூலம் பெறப்பட்ட கடல் பாசி விதைகளை பயன்படுத்தி, 16 மிதவை படல்கள் மூலமாக, பனித்திட்டு கடல் பகுதியில் கடற்பாசி விதகைள் நிர்மாணிக்கப்பட்டன. விதையிடப்பட்டு 45 நாட்கள் கடந்த நிலையில், கடற்பாசிகள் முழு வளர்ச்சி பெற்றதை அடுத்து இவற்றை அறுவடை செய்யும் பணி வியாழக்கிழமை நடந்தது.

இதில், மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ., ஆகியோர் முன்னிலை வகித்து, கடற்பாசி அறுவடையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்நிகழ்ச்சியில், மீன் வளத்துறை இயக்குனர் முகமது இஸ்மாயில், இணை இயக்குனர் தெய்வசிகாமணி, துணை இயக்குனர்கள் மீரா சாஹிப், சாஜிமா, ராஜேந்திரன், மற்றும் திட்ட விஞ்ஞானிகள் வினோத், ஜான்சன், உதவி ஆய்வாளர்கள் கணேசன் மற்றும் பாலமுரளி, பனித்திட்டு கிராம பஞ்சாயத்து முக்கியஸ்தர்களும் மற்றும் மீனவ சுய உதவி குழு பெண்களும் கலந்து கொண்டனர்.

560 கிலோ கடற்பாசிகளை விதைகளாக பயன்படுத்தி முதல் அறுவடையில் சுமார் 2000 கிலோ அளவிற்கு முதல் தரமான கடற்பாசிகள் அறுவடை செய்யப்பட்டுள்ளது. இந்த கடற்பாசிகள் மருத்துவம், உணவுப் பொருள், அழகு சாதன பொருட்கள், தொழில்துறை என பல்வேறு விதங்களில் பயன்படுத்தப்படுகிறது. இதன்மூலமாக கிடைக்கம் வருவாயில் 90 சதவீதம் கடற்பாசி வளர்ப்பு தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கும், 10 சதவீதம் மீனவர் கூட்டுறவு சங்கத்திற்கும் கிடைக்கும். ஒரு வருடத்தில், 4 முதல் 6 முறை கடற்பாசிகளை அறுவடை செய்யலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Summary

Seaweed harvest programme

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com