கரூர் சம்பவ விசாரணை ஆணையம் குறித்து செந்தில் பாலாஜி பேச வேண்டிய அவசியம் என்ன?: கே. அண்ணாமலை கேள்வி

கரூர் சம்பவ விசாரணை ஆணையம் குறித்து செந்தில் பாலாஜி பேச வேண்டிய அவசியம் என்ன? என தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
கரூர் சம்பவ விசாரணை ஆணையம் குறித்து செந்தில் பாலாஜி பேச வேண்டிய அவசியம் என்ன?: கே. அண்ணாமலை கேள்வி
Published on
Updated on
2 min read

கரூரில் தவெக பொதுக்கூட்டம் நடத்திய கரூர் வேலுசாமிபுரம், கூட்டம் நடைபெறத் தகுதியான இடமா என்பதை விசாரிக்க, திமுக அரசே ஒரு ஆணையம் அமைத்துள்ள நிலையில், அதைக் குறித்து செந்தில் பாலாஜி பேச வேண்டிய அவசியம் என்ன? என தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

கரூர் வேலுசாமிபுரம் பகுதியில் தவெக நடத்திய பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த பின்னர், திமுக எம்எல்ஏ வி. செந்தில் பாலாஜியின் செய்தியாளர்கள் சந்திப்பு குறித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை கேள்விகளை எழுப்பியுள்ளார், மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் "கருத்துகளைத் திணிப்பதாக" குற்றம்சாட்டினார்.

கரூர் தவெக பொதுக்கூட்டத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி, பொதுமக்கள் உயிரிழந்தது குறித்து, தவெக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் உண்மை கண்டறியும் எம்பிக்கள் குழுவின் விசாரணையை வதந்திகள் என்று நிராகரித்ததற்காக செந்தில் பாலாஜியை கடுமையாக சாடினார்.

கரூர் தவெக பொதுக்கூட்டத்தில், "கூட்ட நெரிசலில் சிக்கி பொதுமக்கள் உயிரிழந்த துயர சம்பவம் தொடர்பாக, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் எம்பிக்கள் குழு, பாதிக்கப்பட்ட பொதுமக்களைச் சந்தித்து, இந்த துயர நிகழ்வு தொடர்பான விசாரணை, பதவியிலிருக்கும் உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் நடைபெற, பரிந்துரைத்துள்ளது."

இந்த நிலையில் புதன்கிழமை ஊடகங்களைச் சந்தித்த கரூர் திமுக சட்டப்பேரவை உறுப்பினரும் முன்னாள் மதுவிலக்குத் துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி, புதிய கதைகளைக் கூறியுள்ளார். தவெக சார்பில், சிபிஐ விசாரணை கோரிய வழக்கு வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வர உள்ளது. கூட்டத்தில் விஜய் மீது செருப்பு வீச்சு உள்ளிட்ட அசம்பாவிதங்களுக்கான ஆதாரங்கள் இருப்பதாக தவெகவினர் தெரிவித்துள்ளனர். விசாரணையின்போது தவெக வழக்குரைஞர்கள் சமர்ப்பித்துள்ள ஆதாரங்களை ஏற்றுக் கொள்வதும் மறுப்பதும் நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டியது.

மேலும், தேசிய ஜனநாயக கூட்டணியின் உண்மை அறியும் குழுவிடம் பெண்மணி ஒருவர், கூட்டத்தில் கத்திக்குத்து நடந்ததாகக் கூறியிருக்கிறார். இப்படி பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்கையில், இவர் இப்போது ஊடகச் சந்திப்பு நடத்தி, அவை எல்லாம் வதந்தி என்று கூற வேண்டிய அவசியம் என்ன? என்று செந்தில் பாலாஜி மீது சந்தேகங்களை எழுப்பினார் அண்ணாமலை.

மேலும், "கூட்டம் நடந்த கரூர் வேலுசாமிபுரம், கூட்டம் நடைபெறத் தகுதியான இடமா என்பதை விசாரிக்க, திமுக அரசே ஒரு ஆணையம் அமைத்துள்ள நிலையில், அது குறித்து செந்தில் பாலாஜி பேச வேண்டிய அவசியம் என்ன? கருத்துத் திணிப்பு ஏற்படுத்துவதன் நோக்கம் குறித்து கேள்விகள் எழுகின்றன."

கள்ளச்சாராய வியாபாரம் மற்றும் மாநிலத்தில் பெய்த கனமழை குறித்து கவலைப்படாத முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை கடுமையாக சாடிய அண்ணாமலை, கூட்ட நெரிசல் குறித்து தவெகவிடம் கேள்வி கேட்க திமுகவுக்கு என்ன உரிமை? என்று கேள்வி எழுப்பினார்.

"யார் எங்கு சென்றார்கள், யார் செல்லவில்லை என்று கேள்வி எழுப்பும் தகுதி முதலில் திமுகவுக்கு உள்ளதா? என்று கேள்வி எழுப்பியவர், கள்ளக்குறிச்சியில் திமுக கள்ளச்சாராய வியாபாரிகளால் விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்தவர்களில் 66 உயிர்களைக் கொன்றபோது அங்கு போகாத முதல்வர்; தென்மாவட்டங்கள் கனமழையால் பாதிக்கப்பட்டபோது, அங்கு சென்று மக்களைச் சந்திக்காமல், இந்திய கூட்டணி உடன்பாடுகளுக்கு தில்லி சென்ற முதலமைச்சர், தற்போது தனியாக ஓடோடி வந்ததன் பின்னணியை பொதுமக்கள் அறிவார்கள்," என்று அவர் மேலும் கூறினார்.

"நீதிமன்றமும், விசாரணை ஆணையமும் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், முன்னாள் மதுவிலக்கு அமைச்சரின் இத்தனை பதட்டமான வெளிப்பாடுதான் பலத்த சந்தேகங்களை எழுப்புகிறது," என்று அண்ணாமலை தெரிவித்தார்.

"நிலைமையை அரசியலாக்கக் கூடாது" என்று வி. செந்தில் பாலாஜி கூறியதை அடுத்து அண்ணாமலையின் இந்த விமரிசனம் வந்துள்ளது.

"இதை நான் அரசியல் ரீதியாகப் பார்க்க விரும்பவில்லை. பாதிக்கப்பட்ட 41 பேரில் 39 பேர் கரூரைச் சேர்ந்தவர்கள். யாரையும் குறை கூறாமல், வரும் நாட்களில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த சூழ்நிலையை அரசியலாக்கக் கூடாது. எதிர்காலத்தில் அது எந்தக் கட்சியின் நிகழ்வாக இருந்தாலும், நாம் ஒன்றிணைந்து இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்," என்று முன்னாள் அமைச்சர் கூறினார்.

பொதுக்கூட்டம், பேரணியை நடத்தும் அரசியல் கட்சி, நிகழ்வில் எத்தனை பேர் கூடுவார்கள் என்பதை மதிப்பிடுவதற்கு இறுதியில் பொறுப்பாகும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

"ஒரு பொதுக் கூட்டத்தை நடத்தும்போது, ​​எத்தனை பேர் கூடுவார்கள் என்பதைக் கணக்கிட்டு அதற்கேற்ப இடத்தைத் தேர்ந்தெடுப்பது ஒரு அரசியல் கட்சியின் பொறுப்பாகும். கரூர் கலங்கரை விளக்கம் மூலையில், அதிகபட்சம் 7,000 பேர் நிற்க முடியும், அதே நேரத்தில் உழவர் சந்தைக்கு அருகில், சுமார் 5,000 பேர் மட்டுமே கூட முடியும்," என்று அவர் மேலும் கூறினார்.

Summary

BJP leader K Annamalai raised questions over DMK MLA V Senthil Balaji's media interaction after the Karur stampede, which claimed 41 lives, and slammed him for "imposing opinions" amid the ongoing probe.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com