
மாணவர் சமுதாயத்தின் எதிர்காலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் தனியார் பல்கலைக் கழக சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
அரசு உதவிபெறும் தனியார் கல்லூரிகள் மற்றும் தனியார் சுயநிதிக் கல்லூரிகளை பல்கலைகழகங்களாக மாற்ற அனுமதிக்கும் வகையில் நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் திருத்தங்களுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
மாணவ சமுதாயத்தின் நலன் மற்றும் உயர்கல்வியை மேம்படுத்துவதாக கூறி, சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்டிருக்கும் இந்த சட்டத்திருத்தம், அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் அரசு உதவிபெறும் கல்லூரிகளை முழுமையாக தனியார் கட்டுப்பாட்டிற்கு கொண்டு செல்லும் சூழலை உருவாக்கியுள்ளது.
இந்த சட்டத்திருத்தம் அமலுக்கு வரும்பட்சத்தில் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பயிலக்கூடிய மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவிக் கட்டணம், இலவசக் கல்வி, இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகள் நிறுத்தப்படும் என்பதோடு, கல்விக் கட்டணமும் பன்மடங்கு உயரும் என்ற விமர்சனமும் பரவலாக எழுந்துள்ளது.
மேலும், அறநோக்கத்தோடு தொடங்கப்பட்ட கல்லூரிகள் வியாபாரத்தை நோக்கி நகரக்கூடும் என்பதோடு, தங்களின் பணிபாதுகாப்பு, உரிய நேரத்தில் ஊதியம், ஆசிரியர் நியமனத்தில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட நடைமுறைகள் அறவே ஒழிக்கப்படும் என அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தங்களின் வேதனையை பதிவு செய்துள்ளனர்.
எனவே, அரசு உதவிபெறும் கல்லூரிகளை தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்ற அனுமதிக்கும் சட்டத்திருத்தத்தை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, ஏற்கனவே இருந்த நடைமுறையைப் பின்பற்றிட வேண்டும் என உயர்கல்வித்துறையையும், தமிழக அரசையும் தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.