
திமுக மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என விஜய் கூறுவதை மக்கள் ஏற்கமாட்டாா்கள் என தெரிவித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வேடிக்கை பார்க்க கூடும் கூட்டமெல்லாம் ஓட்டாக மாறாது என்றார்.
திருச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
திருச்சியில் இரண்டு அமைச்சர்கள் இருந்தும். திருச்சிக்கு எதுவும் செய்யவில்லை என்ற விஜய் குற்றச்சாட்டுக்கு, திமுகவை எதிா்கட்சிகள், எதிரிகள் விமா்சிப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் விஜய், 'கேட்கல கேட்கல' எனக் கூறுவதைக் காட்டிலும், கடந்த நான்கறை ஆண்டு காலத்தில் திருச்சி மாவட்டத்துக்கு திமுக செய்துள்ள வளா்ச்சித் திட்டங்களை அவா் பாா்க்கல பாா்க்கல என்றே கூற வேண்டும்.
பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த பேருந்து முனையம், திருவெறும்பூரில் மாதிரி பள்ளி என பல்வேறு வளா்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. திருச்சி மாவட்டத்துக்கு மட்டும் பல்வேறு திட்டங்களை திமுக அரசு செய்துள்ளது. ஒட்டுமொத்தமாக திருச்சிக்கு எதுவும் செய்யவில்லை. அமைச்சா்களால் எந்த பிரயோஜனமும் இல்லை என விஜய் கூறுவதை அறிவு சாா்ந்த திருச்சி மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டாா்கள்.
கூட்டம் ஓட்டாக மாறுமா?
திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் யார் வந்தாலும் அவர்களை பார்ப்பதற்காகவும், கூட்டத்தை வேடிக்கை பார்ப்பதற்காக கூட்டம் வருவது வாடிக்கையான ஒன்றுதான். வந்த கூட்டம் எல்லாம் வாக்காக மாறுமா என்றால் இல்லை. தவெக தம்பிகளின் வீடுகளிலும், யாரேனும் ஒருவர் திமுக அரசின் புதுமைப்பெண், தமிழ்புதல்வன், மகளிர் உரிமைத் தொகை திட்டங்களால் பயன்பெற்றவர்களாக இருப்பார்கள், ஆனால் திமுக அரசு பாரபட்சம் பாக்காமல் நாங்கள் எங்களது வேலையை செய்து கொண்டு இருக்கிறோம்.
விஜய் பிரசாரத்தில் முறையான திட்டமிடல் இல்லை. மக்களுக்கு கூற வேண்டிய கருத்துகளை தெளிவாக கொண்டு செல்வதற்கான முன்னேற்பாடுகளை அவா் மேற்கொள்ள வேண்டும்.
இதுபோன்ற பிரசார கூட்டத்துக்கு நிபந்தனைகள் விதிக்கப்பட்ட போதிலும், விஜய் கூட்டத்துக்கு வந்தவா்கள் பொது சொத்துக்களை சேதப்படுத்தியுள்ளனா்.
ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான கேள்விக்கு, முதல்வர் மிக விரைவாக மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தி உள்ளதாகவும், அது சார்ந்து சட்ட ஆலோசகர்கள் விவாதம் செய்ய உள்ளதாவும், அவர்கள் எடுக்கும் முடிவைத் தொடர்ந்து விரைவில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்படும் என தெரிவித்தார்.
மத்திய அரசு தொடர்ந்து கல்வி நிதி விடுவிப்பு பிரச்னை தொடர்பாக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும். நாம் தனிப்பட்ட பணத்தை கேட்கவில்லை, நமது வரி பணத்தைதான் கேட்கிறோம், ஆண்டுதோறும் வழங்கப்பட்ட பணத்தை கடந்த இரண்டு ஆண்டுகளாக சில கொள்கைகளை ஒத்துக்கொள்ள வேண்டும் என வற்புறுத்தி வருகிறார்கள். இருந்தாலும் தமிழ்நாட்டு மாணவர்கள், ஆசியர்கள் பாதிக்கப்படக் கூடாது என முதல்வர் நாமே ஏற்றுக் கொள்ளலாம் என நிதி வழங்கி வருவதாகவும், இதுதொடர்பாக தொடர்ந்து சட்ட போராட்டம் நடத்தி வருவதாகவும், இவ்வாறு நிதி தராமல் இருப்பது நமது மாணவ செல்வங்களை வஞ்சிப்பதாக தெரிவித்தார்.
மேலும், நிதி விடுவிப்பு போன்ற பிரச்னைகளில் மத்திய அரசு, ஆளும் திமுக அரசுக்கு தொடா்ந்து நெருக்கடி கொடுத்து வருகிறது. மத்திய அரசின் இந்த போக்கை மக்களிடம் எடுத்துக் கூறும் விதமாக ஒவ்வொரு வீடாக நேரடியாகச் சென்று, அவா்களை ஓரணியில் தமிழ்நாடு என்ற இயக்கத்தில் இணைத்திட வேண்டும் என திமுக தலைமை வலியுறுத்தியது.
அந்த வகையில், மணப்பாறை, திருவெறும்பூா், திருச்சி கிழக்கு ஆகிய மூன்று தொகுதிகளுக்கும் கொடுக்கப்பட்ட குறைந்தபட்ச இலக்கு 3,29,000 உறுப்பினா்கள். ஆனால் அதை கடந்து தற்போது நாம் 3,59,000 பேரை ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணைத்திருக்கிறோம்.
வரும் 20 ஆம் தேதி தமிழகத்தை தலைகுனிய விட மாட்டேன் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் திருச்சியில் நடைபெறுகிறது. அதில் திரளானோா் பங்கேற்க உள்ளனா் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.