

நெல்லை: வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுக்கு ரூ.2000 வீதம் கொடுப்பதற்காக ஒவ்வொரு தொகுதிக்கும் ரூ.20 கோடி அனுப்பி வைத்துள்ளது என்றும் பணத்தை வைத்து ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று திமுக நம்புவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
நெல்லையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுடன் நயினார் நாகேந்திரன் கூறியதாவது:
கல்வியில் சிறந்த தமிழ்நாடு தற்போது கஞ்சா நிறைந்த தமிழ்நாடாக மாறி இருக்கிறது. ஆளும் திமுக அரசு தொடர்ந்து பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வருகிறது. திறமை இல்லாத அரசாங்கமாக திமுக அரசு இருந்து வருகிறது.
திமுக அரசு தேர்தல் வாக்குறுதியின்படி கொடுக்க வேண்டிய மகளிருக்கான ரூ.ஆயிரத்தை 2 ஆண்டுகளுக்கு பின்னரே கொடுக்க ஆரம்பித்தார்கள். பொங்கலுக்கு இந்த ஆண்டு ரூ.3000 கொடுத்தவர், கடந்த 2 ஆண்டுகளாக கொடுக்கவில்லை. தேர்தல் வருவதால் இந்த பொங்கலுக்கு ரூ.3000 கொடுத்துள்ளார்கள். இதேபோன்று வரும் பேரவைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுக்கு ரூ.2000 வீதம் கொடுப்பதற்காக ஒவ்வொரு தொகுதிக்கும் ரூ.20 கோடி வந்துள்ளது. பணத்தை வைத்து ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று திமுக நம்புகிறது.
சட்டம்-ஒழுங்கு சரியில்லை. சிவகங்கை மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் வழக்கில் நியாயம் கிடைக்கவில்லை. சாத்தான்குளம் இரட்டை காவல் மரண விவகாரத்தில் திமுகவினர் போட்டி போட்டு போராட்டங்கள் நடத்தினர். ஆனால் திமுக ஆட்சியில் தற்போது 33 காவல் நிலைய மரணங்கள் நடைபெற்றுள்ளது. ஆனால் அதையெல்லாம் மறைப்பதற்காக திமுகவினர் டப்பா என்ஜின் என்று போஸ்டர் ஒட்டி வருகின்றனர்.
மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் மார்ச் 1-ஆம் தேதிக்கு மாற்றம்
மார்ச் 1-ஆம் தேதி மதுரையில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இதனை திருவிழா போல் நடத்த உள்ளோம். இதில் கூட்டணி கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்கிறார்கள். மத்திய பட்ஜெட் மிக அழகாக தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. ரூ.40 ஆயிரம் கோடிக்கு செமி கண்டக்டர் உள்பட ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கனிம வளங்கள் தொடர்பாக ஆராய்ச்சி செய்யவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் நெல்லை, தென்காசி மாவட்டத்தில் கனிம வளங்களை இங்கிருக்கும் ஆட்சியாளர்கள் கொள்ளையடித்து கேரரளத்துக்கு அனுப்பி வைக்கின்றனர். கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு மிகவும் நெருங்கிய நண்பர். அவர் இங்கிருந்து கனிம வளங்களை எடுத்துச் சென்றுவிட்டு அங்கிருந்து கழிவுகளை இங்கு அனுப்பி வைக்கிறார்.
விஜய்க்கு எதிராக விசில் அடிக்க தொடங்கியுள்ளது
ரூ.15 கோடி வருமானத்தை மறைத்ததாகக் கூறி, விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் விதித்து வருமான வரித்துறை 2022-ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி உத்தரவிட்டதை சென்னை உயர் நீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது. அவர் ஊழல் செய்ய மாட்டேன் என்று சொல்லி வருகிறார். இப்போது தான் விஜய்க்கு எதிராக விசில் அடிக்க தொடங்கியுள்ளது. இனி நாங்கள் ஒன்று சேர்ந்து அவருக்கு எதிராக டிரம் அடிப்போம்.
இறுதி கட்டத்தில் எய்ம்ஸ் கட்டுமானப் பணி
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் 2 நாட்களில் நேரில் சென்று மருத்துவமனையை ஆய்வு செய்ய இருப்பதாக அவர் கூறினார்.
The DMK has sent Rs. 20 crore to each constituency says Nainar Nagendran
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.