

திருச்சி: அதிமுக - தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில்தான் மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்ற முடியும் என மக்கள் நம்புகிறார்கள் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
திருச்சியில் சனிக்கிழமை செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது:
மார்ச் 10 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திருச்சிக்கு வருகை தர உள்ளார். அன்றைய தினம் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. அதற்காக இடம் தேர்வு செய்ய உள்ளோம். இடம் தேர்வு செய்து கூட்டணி கட்சிகளிடம் ஆலோசித்து எந்த இடத்தில் பொதுக்கூட்டம் நடத்துவது என்பது தொடர்பான இறுதி முடிவை பின்னர் அறிவிப்போம்.
மக்கள் முடிவு செய்வார்கள்
200 இடங்களில் திமுக வெற்றி பெறுவோம் என்கிறார்கள். ஆனால் 200 இடங்களில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள்.
90% தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை
திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளில் எத்தனை சதவீதம் நிறைவேற்றி உள்ளோம் என்பதை அந்த கட்சி தலைவர்களே மாற்றி மாற்றி கருத்து கூறிவருகின்றனர். ஆனால் அவர்கள் 90 சதவீத தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
மீண்டும் பொய்யான வாக்குறுதிகள்
ஏற்கனவே பொய்யான வாக்குறுதியை கொடுத்தது ஆட்சிக்கு வந்ததுபோல், மீண்டும் பொய்யான வாக்குறுதிகளை கொடுக்க தொடங்கியுள்ளது திமுக அரசு.
நிச்சயம் வெற்றி பெறுவோம்
இப்போது எங்களுக்கு உள்ள கூட்டணி 2021 இல் இருந்திருந்தால் நாங்கள் அப்போது 110 இடங்களில் வெற்றி பெற்று இருப்போம். வரும் தேர்தலில் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம்.
நல்ல ஆட்சி நடைபெறவில்லை
திமுக ஆட்சியில் 5 ஆண்டுகளும் சட்டம்-ஒழுங்கு சரியில்லை, கஞ்சா மிகுந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. கொங்கு பகுதிகளில் வயதானவர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். யாருக்கும் எந்த பாதுகாப்பும் இல்லை. 33 சிறைச்சாலை மரணங்கள் நடந்துள்ளது.
தமிழ்நாட்டில் நல்ல ஆட்சி நடைபெறவில்லை. பணப்பெட்டியை வாங்கிக் கொண்டுதான் திமுக கூட்டணியில் சேர்ந்து வருகிறார்கள். எங்கள் கூட்டணி வலுவாக உள்ளது, திமுக கூட்டணி வலுவிழந்து உள்ளது.
மக்கள் ஆதரவு
இந்த நிலையில் தான் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் ஆதரவு தெரிவிக்கிறார்கள்.
200 இடங்களில் நிச்சயம் வெற்றி
அதிமுக - தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் தான் மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்ற முடியும் என மக்கள் நம்புகிறார்கள். நாங்கள் 200 இடங்களில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்றார்.
ஓபிஎஸ் தான் முடிவு செய்ய வேண்டும்
ஓபிஎஸ் மீது மதிப்பு வைத்துள்ளோம். எந்த பக்கம் இருந்தால் அவருக்கு நல்லது என்பதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும். திமுக அமைச்சர்கள் பலர் மீது நிறைய வழக்கு உள்ளது. அமைச்சர் கே.என்.நேரு விவகாரம் தொடர்பாக நீதிமன்றம் கூறிய கருத்துகளுக்குள் நாங்கள் செல்லவில்லை.
பேச்சுவார்த்தை தொடங்கவில்லை
தொகுதி பங்கீடு தொடர்பாக இதுவரை நாங்கள் பேச்சுவார்த்தை தொடங்கவில்லை பேச்சுவார்த்தை தொடங்கி கூட்டணி கட்சிகளுடன் பேசி இறுதி முடிவை எடுப்போம்.
தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய அனைத்து நிதிகளையும் மத்திய அரசு வழங்குகிறது. அனைத்து நிதிகளையும் பெற்றுக்கொண்டு நிதி கொடுக்கவில்லை என தமிழக அரசு கூறுகிறது.
ஆண்டுதோறும் ஆயிரம் கோடி பேரிடருக்கான நிதி ஒதுக்கப்படுகிறது. கல்விக்கான நிதியும் தொடர்ந்து ஒதுக்கப்பட்டு தான் வருகிறது.
ஆதி திராவிடர் நல துறைக்கு கொடுக்கும் நிதியை வேறு துறைக்கு தமிழக அரசு பயன்படுத்துகிறது.
பணப்பெட்டி வாங்கி கூட்டணியில் சேர்கிறார்கள் என யாரை குறிப்பிடுகிறீர்கள் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.