

வெந்நீரில் தினமும் குளிப்பது உடல் நலத்துக்கு கெடுதல். ஏன்?
காலை ஆறு மணி. குளிர் காலம். கதகதப்பான படுக்கையை விட்டு எழுந்திருக்கவே மனம் வராது. ஆனால் வேறு வழியில்லை, எழுந்து தான் ஆகவேண்டும். மெதுவாக கண் விழித்து, பல் துலக்கியபின் நல்ல சூடான தண்ணீரில் குளித்தால் தான் பலருக்கு சோம்பல் நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும். வெந்நீர்க் குளியல் உடலுக்கும் மனத்துக்கும் சுகம் அளிக்கும் என்றும் சிலர் நம்புகிறார்கள். மிகச் சூடான வெந்நீரில் சிறிதளவு யூகலிப்டஸ் எண்ணெய் கலந்து குளித்தால் உடல்வலி நீங்குவதுடன் சளி இருமல் பிரச்னைகள் இருந்தால் சரியாகும் என்று நினைப்பீர்கள். ஆனால் அது உண்மை இல்லை. சுடுதண்ணீரில் குளிப்பதால் ஏற்படும் பிரச்னைகள் பற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறுவதைக் கேளுங்கள்.
உண்மையில் வெந்நீர்க் குளியல் உடலுக்கு நன்மை செய்வதை விட தீமைகளையே அதிகம் செய்கின்றன. ஆண்கள் கொதிக்கும் நீரில் அரை மணிக்கு மேலாக குளித்துக் கொண்டிருந்தால் அது அவர்களின் ஆண்மைக்கே பிரச்னையாகிவிடும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். ஏற்கனவே பிரச்னை இருப்பவர்கள் பச்சைத் தண்ணீரில் குளிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். சுடு தண்ணீர் நிரம்பிய பாத் டப்பில் அவர்கள் வெகுநேரம் குளிக்கவே கூடாது.
உங்கள் சருமம் மென்மையாக ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் அடிக்கடி சுடு தண்ணீரில் குளிப்பதை தவிர்த்துவிடுங்கள். வெந்நீரில் குளிக்கும் போது சருமத்தின் ஈரத்தன்மை குறைந்துவிடும். உங்களுடைய சரும வகை சென்சிட்டிவ்வாக இருந்தால் நிச்சயம் சுடு தண்ணீரில் குளிக்கக் கூடாது. அரிப்பு, அலர்ஜி போன்றவை இலவச இணைப்பாக வந்து சேரும்.
சுகமான தூக்கத்தைக் கலைக்க வெந்நீர்க் குளியல் தான் சிறப்பு என்று நினைப்பது தவறு. குளிக்கும் போது சுகமாக இருக்கும், உடல் மனம் எல்லாம் தளர்ச்சி அடைந்து ரிலாக்ஸ் ஆகும். ஆனால் குளித்து முடித்தவுடன் மீண்டும் தூக்கம் வரும். குட்டியாக ஒரு தூக்கம் போடலாம் என்று உடல் கோரும். புத்தம் புதிய நாளின் துவக்கத்தில் உங்களை படு சோம்பேறியாக்கிவிடும். தவிர தொடர்ந்து வெந்நீரில் குளிப்பவர்களுக்கு இளமைத் தோற்றம் மாறி விரைவில் தோல் சுருக்கம் ஏற்படும்.
சுடச் சுட தண்ணீரைத் தலையில் கொட்டிக் குளிப்பதால் தலைமுடியின் வேர்கள் பலமிழந்து அதிக அளவில் முடி கொட்டும். ஆண்களுக்குத் தலையில் வழுக்கை விழுந்துவிடும்.
மழைக்காலத்திலும் பனிக்காலத்திலும் சுடுதண்ணீர் குளியல் சுகமாகத் தான் இருக்கும். அப்படியே பழகிவிட்டால் உடல் அதற்கு அடிமையாகிவிடும். அதன் பின் வரும் வெயில் காலத்தில் கூட பலர் வெந்நீரில் தான் குளிப்பார்கள். பழக்கம் தான் காரணம்.
எனவே அடுத்த தடவை நீங்கள் படுக்கையிலிருந்து எழுந்து கொள்ளும் போது இரண்டு சொம்பு குளிர்ந்த நீரில் முதலில் குளியுங்கள். அதன் பின் அந்த குளிர்ச்சி உடலுக்குப் பழகிவிடும். முழுக் குளியலையும் பச்சைத் தண்ணீரில் குளிப்பதால் உங்கள் உடலும் மனமும் புத்துணர்ச்சியாகும். அந்த நாள் சுறுசுறுப்பாகவும் இயக்கமாகவும் இருக்கும். தவிர உங்கள் சருமம் பொலிவாகும், தலைமுடி உதிராது. இளமையின் இருப்பிடமாக நீங்கள் இருப்பீர்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.