இக்கதையில் வரும் விநாயகம் தனக்கு 33 வயதாகும் வரையிலும் எந்தப் பெண்ணையும் ஏறெடுத்துப் பார்த்ததில்லை. ஒரு பெண் பின்னாடியும் சுற்றித் திரிந்ததில்லை. அப்படிப்பட்டவன் வாழ்க்கையில், 28 வயதில் கணவனை இழந்த கைம்பெண்ணும் இரு பெண்குழந்தைகளுக்குத் தாயுமான கமலத்தின்மீது மட்டும் இனம்புரியாத மோகம் பீரிட்டுக் கொண்டுவந்துவிடுகிறது. அதன்பிறகு தன்வாழ்க்கை என்ற நிலையிலிருந்து விநாயகம் வெளியேறிவிடுகிறான். தன் ஊர் மறந்துவிடுகிறது. ஊரில் நடக்கும் திருவிழா, காப்பு, நிச்சயதார்த்தம், திருமணம் ஏன் ஈமக் கிரியைகள் கூட மறந்து விடுகிறது. தன் சொந்த பந்தங்களெல்லாம் மறந்து விடுகிறது. ஒரே பெண் கமலம், ஒரே வீடு அவள் வீடு, ஒரே வேலை அவள் சொல்லும் வேலைகளை செய்வது என்று திரிய ஆரம்பித்துவிடுகிறான் விநாயகம். வெளியே அண்ணன் என்று சொல்லிக்கொள்ளும் இந்த பெயர் வைக்கப்படாத உறவும் அதனால் இவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் மிக ஆழமாக அலசுகிறது இந்நாவல்.
விநாயகத்திற்கும் கமலத்திற்கும் உறவு முளைத்தபின் கமலத்தை கிராமவாசிகள் அனைவரும் விநாயகத்தின் பொருளாகப் பார்க்கின்றனர். ஆனால் அவள் நகரத்திற்கு இடம் பெயர்ந்த பின் அவள் பொதுப் பொருளாய் பார்க்கப்படுகிறாள். இதில்கூட கிராமமும் நகரமும் எதிரெதிர் திசையில் இருப்பதையும் அவர்களின் இந்த பெயர் சொல்லப்படாத உறவை எதிர்நோக்கும் பார்வை வேறுபாட்டையும் மிகத் துல்லியமாக எடுத்துக்காட்டுகிறார் இமயம்.
பணம் சம்பாதிக்கிறதுக்காக எத வேணுமின்னாலும் செய்யற பைத்தியம் இருக்கு. ஊரு, காடுகாடுன்னு சேக்கிற பைத்தியம் இருக்கு. ஒருத்தனுக்கு சாராயம். ஒருத்தனுக்குப் பீடி, சிகரட்டு, எம்.எல்.ஏ ஆவணும். எம்.பி., மந்திரி ஆவணுங்கிற பைத்தியம். சினிமாவுல நடக்கிறதுதான் வாழ்க்க லட்சியம்ன்னு திரியுறவன், நல்ல சினிமா எடுக்கப் போறான்னு சோத்துக்கு இல்லாம அலயுறவன். சாமி இருக்குன்னு சொல்ற பைத்தியம் இருக்கு. சாமி இல்லைன்னு தீச்சட்டிய ஏந்திக்காட்டுற ஆளும் இருக்கு. இப்பிடி ஒலகத்திலே இருக்கிற ஒவ்வொருத்தனுக்கும் ஒரு பைத்தியம். ஒலகமே பைத்தியமாத்தான் இருக்கு. எனக்குக் கமலா பைத்தியம்னு சொல்ற விநாயகத்தின் உறவை அவரது தங்கைகள் ஏற்றுக் கொள்ளுகிறார்கள். கமலாவின் வீட்டிற்குச் சென்று சீர்செய்து சமைத்துச் சாப்பிட்டுவிட்டு வந்து உறவு கொண்டாடுகிறார்கள் அவர்தம் தமக்கைகள்.
இந்நாவலில் கதையை விவரிக்கும் விநாயகத்திற்கு முன்னோடியாய் அவனுக்கு முந்தைய தலைமுறையில் அவ்வூரில் வாழ்ந்தவர் பாவாடை. விநாயகமும் அடுத்த தலைமுறையின் பாவாடையாக மாறப் போகும் அபாயத்தைச் சுட்டிக் காட்ட முயல்கிறார் இமயம் அவர்கள். சென்ற தலைமுறையில் ஒரு பாவாடை, இத்தலைமுறையில் ஒரு விநாயகம் என்றால் அடுத்த தலைமுறை யாரோ ஒருவரைக் குறிவைத்து சுற்றிக் கொண்டிருக்கிறது ? அது செல்வமா, சுப்பிரமணியா, கருப்பனா சுப்பனா ? என நம்முள் வினா எழுப்பியிருக்கிறது இந்நாவல்.
ஆணுக்கும் பெண்ணுக்குமான இச்சிக்கலான உறவில் எப்போது நுழைவோம் என்று காத்திருந்தது போல சந்தேகம் இடம் பெற்று இவ்வுறவை மேலும் சிக்கலானதாக ஆக்கியிருக்கிறது. பெரும்பாலும் இத்தகைய உறவுகளின் முடிவாக செய்தித்தாளில் நாம் தினசரி வாசிக்கும் சம்பவங்களைப்போல இக்கதையும் அதே முடிவை நோக்கி பயணிப்பதாகத் தெரிந்தாலும், விநாயகம் இதிலிருந்து வெளியே வருவாதாய் முடித்திருப்பது மிகவும் சுபம்.
இந்நாவலில் இமயம் கையாண்டிருக்கும் மொழி இதுவரை அவர் எழுதிய நாவல்களிலிருந்து மிகவும் தனிப்பட்டு நின்றாலும், கமலத்தைத் தொட்டுவிட்டு விடமுடியாமல் தவிக்கும் இந்நாயகனைப்போலவே, இந்நாவலைத் தொட்டுவிட்ட யாரையும் முழுதும் வாசித்து முடிக்காமல் கீழே வைக்கவிடாத அளவுக்கு நமக்கு நெருக்கமான ஒரு உணர்வைத் தரும் மொழியாகவே இருக்கிறது. வட்டார மொழிநடையில் இத்துணை உவமைகளைக் கையாள முடியுமா ? கம்பராமாயணத்தில் கம்பன் பயன்படுத்திய உவமைகள் எத்துணை வித்தியாசமானதோ அத்துணை வித்தயாசமானது இந்நடையில் இவர் பயன்படுத்தியிருக்கும் உவமைகள். அந்த உவமைகள் அனைத்தின் பட்டியலையும் இதில் தருவதில் எனக்கு ஆர்வம் அதிகமிருந்தாலும், இதின் வாசகர்களாகிய என்நண்பர்களின் நலன் கருதி அதில் சிலவற்றறை மட்டும் இங்கே குறிப்பிட விழைகிறேன்.