தீபாவளிக்கு புதுத் துணி வாங்கியாச்சா?

தீபாவளி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கொண்டாடி மகிழும் பண்டிகை.
தீபாவளிக்கு புதுத் துணி வாங்கியாச்சா?

தீபாவளி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கொண்டாடி மகிழும் பண்டிகை. தீபாவளியில் முக்கியமாக அனைவரும் விரும்புவது புத்தாடை தான்.  மழை அவ்வப்போது தமிழகத்தில் பெய்து வந்தாலும் மால்களிலும், பிரபல துணிக்கடைகளிலும் ஷாப்பிங் களை கட்டுகிறது. நண்பர்கள் சந்தித்தால் தீபாவளிக்கு ட்ரெஸ் எடுத்தாச்சா என்று தான் உரையாடலை தொடங்குகிறார்கள்.

பெண்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். இந்த வருஷ தீபாவளிக்கு என்ன ப்ளான் என்று குடும்பத்தில் கூடிக் கூடி திட்டம் போட்டு விவாதித்து ஆர்வத்துடன் புதிய ஆடைகளை வாங்கிக் குவிப்பார்கள். இப்படி தீபாவளியில் முக்கிய பங்கு வகிக்கும் புத்தாடைகளை சரியாகத் தேர்ந்தெடுத்து வாங்குவது எப்படி? இதோ சில டிப்ஸ்

கூட்டுக் குடும்பத்தில் தீபாவளி ஷாப்பிங் போகும் போது கூடுமானவரை அனைவரும் ஒன்றாகப் போவது நல்லது. காரணம் ஒருவர் வரவில்லையென்றாலும் அவர்களுக்காக மற்றவர்கள் தேர்ந்தெடுத்தால், சம்பந்தப்பட்டவருக்குப் பெரும்பாலும் அது பிடிப்பதில்லை. எனவே ஒரு லீவ் நாளினைத் தேர்ந்தெடுத்து அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து கொண்டாட்டத்தை ஷாப்பிங்கிலிருந்து தொடங்குங்கள்.

பெண்கள் ஷாப்பிங் செய்வதில் எப்போதுமே விற்பன்னர்கள்தான். ஆனால் அவர்களே கூட சில சமயம் ஏதாவது ஒரு விஷயத்தில் கோட்டை விட்டுவிடுவது உண்டு. எனவே ஷாப்பிங் செல்வதற்கு முன் மார்க்கெட்டில் என்ன ஃபேஷன் நிலவுகிறது, எவ்வகை ஆடைகள் ட்ரெண்டிங்கில் உள்ளன, புது டிசைன்கள் என்னென்ன வந்துள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அதன் பின்னர் கடைகளுக்குப் போவது நேரத்தை மிச்சப்படுத்துவதுடன் அவசரமாக எதையும் வாங்கிவிட்டு பின்னர் ஏமாற்றத்துக்கு உள்ளாகாமல் இருக்கலாம்.

உங்களுக்குப் பிடித்த உடையை தேர்வு செய்யும்போது, என்னவெல்லாம் கவனிக்க வேண்டியது அவசியம் என்று முதலில் தீர்மானம் செய்துக் கொள்ளுங்கள். அதற்கு முதலில் பட்ஜெட், சைஸ், கலர் போன்றவற்றை மனத்துக்குள் பட்டியல் போட்டுக் கொண்டு, ஷாப்பிங் செல்லத் தயாராகுங்கள்.

குழந்தைகளுக்கு தனி நேரம் ஒதுக்கி அவர்களுக்குப் பிடித்தமான ஆடைகளை வாங்கித் தந்துவிடுங்கள். இல்லையெனில் உங்கள் வீட்டு வாண்டுகள் உங்களை ஒருவழி செய்துவிடுவார்கள்.

பண்டிகைக்கு வாங்குவதால் சிறப்பான ஆடைகளை நல்ல தரத்தில் இருக்குமாறு தேர்ந்தெடுத்து வாங்குங்கள். மேலும் நீங்கள் வாங்கவிருக்கும் ஆடை உங்கள் உடலுக்கும் நிறத்துக்கும் பொருத்தமாக உள்ளதா என்பதை ஒரு தடவை ட்ரையல் ரூமில் அணிந்து பாருங்கள். உடை சரியான அளவில் இருக்கும்படி ஒன்றுக்கு இரண்டு முறை சரிபார்த்துக் கொள்வது தவறில்லை.

உடை பொருத்தமாக இருந்துவிட்டால் மட்டும் போதாது. அணிவதற்கும் வசதியான டெக்ஸ்சரில் இருக்கும்படியான ஆடைகளைத் தேர்ந்தெடுங்கள். அந்த துணியின் வகை மற்றும் ரகத்தை ஆராய்வது நல்லது. ஆடை வடிவமைப்பிலும் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். 

எல்லாவற்றையும் விட முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால் நீங்கள் தேர்ந்தெடுத்த ஆடையில் டேமேஜ் எதுவும் உள்ளதா என்பதை சரி பார்க்க வேண்டும். துணியில் ஏதேனும் சுருக்கம் அல்லது நிறம் மங்கியிருக்கிறதா என்று கவனிப்பது மிக அவசியம். எங்காவது தையல் பிரியும்படி லூசாக தைக்கப்பட்டிருக்கிறதா? அல்லது தையல் இறுக்கமாக இல்லாமல் பிரியும்படி இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

நீங்கள் ஆயத்த ஆடைகளை வாங்கப் போகிறீர்களா இல்லை துணி வாங்கித் தைத்துக் கொள்ளப் போகிறீர்களா என்பதை முன்னாலேயே முடிவெடுத்து அதற்கேற்றபடி ஆடைகளை வாங்குங்கள். மேலும்  உங்களுக்கு பிடித்த டிசைனில் ஆடை உள்ளதா என்பதில் அதிக கவனம் செலுத்துங்கள். பாக்கெட், தோள்பட்டை, காலர், பட்டன்கள் போன்றவற்றையும் சரி பார்த்து வாங்குங்கள். அவசரத்தில் வாங்கிவிட்டு அதன் பின் பட்டன் சரியில்லை, ஸ்டிச்சிங் பிரிந்துவிட்டது என்று கவலைப்படுவதில் அர்த்தம் இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com