அக்ஷய்குமார் நடிப்பில் வெளிவர இருக்கும் இந்தித் திரைப்படமான ‘சூர்யவன்சி’ யில் அக்ஷயின் அம்மாவாக நடிக்க நடிகை நீனா குப்தா தேர்வாகி இருந்தார். நீனாவை வைத்து இரண்டு, மூன்று நாட்கள் படப்பிடிப்பும் நடந்து முடிந்தது. இந்நிலையில் திடீரென நீனா அத்திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்டதாகச் செய்திகள் கசிந்துள்ளன. ஏன்? என்ற கேள்விக்கு நீனா அளித்த பதிலில், படத்தில் எனக்கான பகுதிகள் கதைப் போக்குடன் ஒட்டாமல் இருப்பதால் இயக்குனருக்கு அதில் சம்மதமில்லை. அதனால் தான் நான் சம்மந்தப்பட்ட காட்சிகள் தேவையில்லை என்று நீக்கி விட்டார்கள் என்று கூறியிருந்தார். ஆனால், நீனா நீக்கப்பட்டதற்கான உண்மையான காரணம் அவருக்கும் அக்ஷய் குமாருக்குமான வயது வித்தியாசம் வெகு குறைவாகவே இருப்பதால் இருவரும் இணைந்து நடிக்கும் காட்சிகளைத் திரையில் ஓட்டிப் பார்க்கையில் அம்மா, மகன் போலத் தோன்றவில்லை என்பதே நிஜம் என்கிறார்கள் படப்பிடிப்புக் குழுவினர்.
நடிகை நீனா குப்தா, சில மாதங்களுக்கு முன்பு அளித்த நேர்காணல் ஒன்றில் தனக்குப் படவாய்ப்புகள் குறைந்து விட்டன என்று கூறி இருந்தார்.
ஹாலிவுட் நடிகையான மெரைல் ஸ்டிரிப் போல வயதான பின்பும் தங்களுக்கான முக்கியத்துவம் மிகுந்த கதாபாத்திரங்களில் நடித்துப் புகழடையும் நடிகைகள் இந்தியாவில் அறவே குறைவு என்று அவர் தனது கருத்தைப் பதிவு செய்திருந்தார். நடிகைகள் குறைவு என்பதைக் காட்டிலும் அத்தகைய நடிகைகளுக்கான பொருத்தமான கதைகளை உருவாக்கும் இயக்குனர்கள் குறைவு என்று கூட இதை எடுத்துக் கொள்ளலாம்.
நீனா இப்படி ஒரு ஆதங்கத்துடன் இருக்கையில் அவருக்கான படவாய்ப்பு தட்டிப்போனது அவரை மேலும் கவலையுறச் செய்துள்ளது.