‘காலிங் பெல் அடித்தது முதலை, மொபைல் ஃபோனை எடுத்து வந்த திமிங்கலம்’ இரண்டுமே படத்தில் அல்ல, நிஜத்தில்!

காலிங் பெல் அடித்து விட்டுத் தரையோடு தரையாகப் படுத்திருந்தது யார் தெரியுமா? சாட்ஷாத் அண்ணன் முதலையார் தான். 
‘காலிங் பெல் அடித்தது முதலை, மொபைல் ஃபோனை எடுத்து வந்த திமிங்கலம்’ இரண்டுமே படத்தில் அல்ல, நிஜத்தில்!

சிறுவர் கதைகளில் வாசித்திருப்போம். மிருகங்கள் மனிதர்களைப் போலவும் சில சந்தர்பங்களில் மனிதர்களை விடவும் கூட புத்திசாலித்தனத்துடன் செயல்படுவதைப் பற்றி. அதெல்லாம் கதை. நிஜத்திலும் சில புத்திசாலி பறவைகள் மற்றும் மிருகங்களைப் பற்றி நாம் அறிந்திருப்போம். ஆனால் அவையெல்லாம் எந்த விதத்திலும் இப்போது நான் விவரிக்கப் போகும் அதிசய சம்பவங்கள் இரண்டுக்கு உறை போடக் காணாது.

சம்பவம் 1:

அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தைச் சார்ந்த மிராட்டில் எனுமிடத்தில் ஒரு வீட்டில் தொடர்ந்து காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டிருக்கிறது. வீட்டினுள் இருக்கும் எஜமானி வந்து கதவைத் திறக்குமுன் மேஜிக் விண்டோ வழியாக காலிக் பெல் அடிப்பது யார் என்று நோட்டமிட்டிருக்கிறார். அங்கே யார் காலிங் பெல் அடித்து விட்டுத் தரையோடு தரையாகப் படுத்திருந்தது யார் தெரியுமா? சாட்ஷாத் அண்ணன் முதலையார் தான். அண்ணனுக்கு அந்த வீட்டினரோடு அப்படி என்ன டீலிங் இருந்திருக்குமென்று தெரியவில்லை. கதவைத் திறக்க வந்த வீட்டுக்காரப் பெண்மணி அதிர்ச்சியில் உறைந்து அப்படியே நின்று விட்டார். அண்ணன் முதலையார் காத்திருந்து பார்த்து விட்டு பிறகு ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றிருக்கிறார். எப்படி இருக்கிறது பாருங்கள் கதை! தவளை போல முதலையும் நீரிலும், நிலத்திலுமாக வாழக்கூடிய இருவாழிடப் பிறவி தான். ஆனால், அதற்காக சமதளத்தில் நகரக்கூடிய ஒரு பிராணி, எக்கி, எம்பி நின்று சுவரோடு சுவராகப் பதிந்து நின்று வீட்டின் காலிங் பெல்லை அடிப்பதும், அடித்து விட்டு காத்திருப்பதும் அமானுஷ்யமான விஷயங்கள் தான் இல்லையா? ஒருவேளை அந்த வீட்டம்மா கதவைத் திறந்திருந்தால் என்னவாகி இருக்கும்? என்பது தான் தெரியவில்லை. இந்தச் சம்பவம் இணையத்தில் பகிரப்பட்டு தற்போது வைரலாகி வரும் சம்பவங்களில் ஒன்றாகி இருக்கிறது.

சம்பவம் 2: 

இரண்டாவது சம்பவம் நடந்தது நார்வேயில். அங்கு நண்பர்களுடன் ஹம்மர்ஃபெஸ்ட் ஹார்பர் பகுதியில் படகுப் பயணம் மேற்கொண்ட இஷா ஒப்தால் எனும் இளம்பெண், தனது விலையுயர்ந்த மொபைல் ஃபோனை கடலுக்குள் தவறவிட்டிருக்கிறார். தவறி விழுந்த ஃபோனை மீட்டுக் கொண்டு வந்து தந்தது யார் தெரியுமா? அது ஒரு திமிங்கலம். நார்வே கடல்பகுதிகளில் காணப்படும் பெலுகா திமிங்கலங்களில் ஒன்று இஷாவின் மொபைல் ஃபோனை வாயில் கவ்விச் சென்று இஷா அமர்ந்திருந்த படகைப் பின் தொடர்ந்து வந்து அவரது கையில் ஒப்படைத்திருக்கிறது. இதை விடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் இஷா ஒப்தால். 


மேற்கண்ட இரண்டு சம்பவங்களுமே அதிசயமானவை தான் இல்லையா?
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com