இஸ்ரேல் நாட்டிலுள்ள பிரபல நகை நிறுவனம் ஒன்று உலகிலேயே விலையுயர்ந்த முகக்கவசம் ஒன்றை தயாரித்து வருகிறது.
கரோனா வைரஸின் தாக்கத்தினால் உலகம் முழுவதும் முகக்கவசங்களின் தேவை அதிகரித்துள்ளது. இந்நிலையில், இஸ்ரேல் நாட்டின் மிகப்பெரிய நகை நிறுவனமான யுவெல், தங்கம் மற்றும் வைரத்தால் ஆன விலையுயர்ந்த முகக்கவசத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இதன் மதிப்பாக 1.5 மில்லியன் அமெரிக்க டாலர் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது இந்திய மதிப்பில் 11 கோடியே 22 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் (ரூ.11,22,45,000)
18 காரட் தங்கத்தால் ஆன இந்த முகக்கவசத்தில் 3,600 வெள்ளை மற்றும் கருப்பு வைரங்கள் பொறுத்தப்பட்டுள்ளன. வடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப சிறந்த முறையில் N99 ஃபில்டருடன் வடிமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் இறுதிக்குள் இதனை உருவாக்கும் பணி நிறைவடையும் என்றும் இதுவே உலகின் மிக விலையுயர்ந்த முகக்கவசமாக இருக்கும் என்றும் யுவெல் நிறுவனத்தின் உரிமையாளரான ஐசக் லெவி தெரிவித்தார். இந்த விலையுயர்ந்த முகக்கவசத்தை வடிவமைத்தவரும் இவரே.
மேலும், வாடிக்கையாளர் ஒருவரின் தேவைக்கேற்பவே இதனை வடிவமைப்பதாகக் கூறிய லெவி, வாடிக்கையாளர் அமெரிக்காவில் வசிக்கும் ஒரு சீனத் தொழிலதிபர் என்ற தகவலை மட்டும் வெளியிட்டுள்ளார்.
இதன் எடை 270 கிராம் என்ற அளவில் இருக்கும். அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் முகக்கவசத்தை விட இது 100 மடங்கு எடை அதிகமாக இருக்கும் என்றார். மேலும், அனைவராலும் இதனை வாங்க முடியாது என்றாலும் முடிந்தவர்கள் வாங்கி அணிவதன் மூலமாக மற்றவர்களின் கவனத்தைப் பெற முடியும் என்று தெரிவித்தார்.
மேலும், வாடிக்கையாளருக்காக உருவாக்கப்பட்ட இந்த முகக்கவசத்தை தான்கூட அணியப் போவதில்லை என்றும் அதேநேரத்தில் இதனை உருவாக்கும் ஒரு புது முயற்சிக்கு வாய்ப்பளித்தமைக்கு வாடிக்கையாளருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.